Show all

தமிழில் படித்தோருக்கு 20% முன்னுரிமையை பின்பற்ற உயர் அறங்கூற்றுமன்றம் ஆணை

08,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழ் வழியில் படித்தோருக்கு அரசு வேலை வாய்ப்பில் 20விழுக்காடு முன்னுரிமை வழங்கும் அரசாணையை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் அறங்கூற்றுமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருவண்ணாமலையைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

தான் அரசு தொழில் நுட்பக் கல்லூரி விரைவுரையாளர் பணிக்கு விண்ணப்பித்த நிலையில், முதுநிலை வரை தமிழில் படித்த தன்னை சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கவில்லை என்றும், எனவே, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்குமாறு அரசுக்கு உத்தரவிடக் கோரியும் செந்தில்குமார் மனு பதிகை செய்தார்.

மனுவை விசாரித்த சென்னை உயர் அறங்கூற்றுமன்றம்!

தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 20விழுக்காட்டு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு,

தமிழ்தொடர்ஆண்டு-5112ல் (2010) வெளியான அரசாணையை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அரசுக்கு உத்தரவு பிறப்பித்ததோடு,

மனுதாரர் செந்தில்குமாரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் வழியில் கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக, தமிழ்தொடர்ஆண்டு-5112ல் (2010) கலைஞர் அவர்கள் தமிழக முதல்வராக இருந்த போது,

தமிழக அரசு ஒரு சட்டம் கொண்டு வந்தது. இதன்படி, தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலை நியமனங்களில் 20 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என உத்தரவிடப்பட்டது.

இதை எதிர்த்து உயர் அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, இடைக்காலத் தடை பெறப்பட்டு,

மீண்டும் இந்த தடை நீக்கப்பட்டு, வேலை நியமனங்களில் 20 விழுக்காடு உள்ஒதுக்கீடு நடைமுறையில் பின்பற்ற சட்டம் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,616

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.