03,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி கேட்டு கோவை மாவட்ட ஆட்சியரிடம் இளம் சகோதரிகள் இருவர், மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில், மேடை அலங்காரம் செய்து வருபவர் சாந்தகுமார். அவரது இரு மகள்கள், ஒருவர் பெயர் தமிழ் ஈழம் மற்றவர் பெயர் ஓவியா. தமிழ் ஈழம், வணிகவியல் இளவல் மூன்றாமாண்டும், ஓவியா ஒன்பதாம் வகுப்பும் படித்து வரும் மாணவிகள். அந்த மாணவிகள் இருவரும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது: பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவம் 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளதாகவும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் அடாவடிகளை கேள்விப்படும் போதும் எங்களுக்கு அச்சமாக உள்ளது. இத்தனை நாட்களாக காவல்துறை இதை கண்டுகொள்ளாமல், அல்லது கண்டுபிடிக்காமல் இருந்துள்ளது. எனவே எங்களை நாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை வந்துள்ளதாகவே நாங்கள் அறிகிறோம். எனவே நாங்கள் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு, எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெண்கள் தமது பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கேட்டுள்ள சம்பவம் தமிழகத்தின் தற்போதைய நிலையின் மீதான கோபத்தின் வெளிப்பாடு என்பதை அரசு உணர்ந்து: முதற்கட்டமாக சமூகப் பொறுப்பற்றவர்களை உருவாக்கும் சாராயக்கடை வணிகத்தை நிறுத்த வேண்டும். அடுத்து சமூகப் பொறுப்பற்றவர்களை உருவாக்கும் கந்து வட்டியை ஒழிக்க அரசே பாமர மக்களுக்கான கடனுதவி திட்டத்தை செயல் படுத்த வேண்டும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,094.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.