Show all

பெங்களூர் பயணிக்கும் கோதண்டராமர்! தமிழகத்தில் வடிக்கப் பட்ட 64 அடி உயர சிலை; பல்வேறு சிரமங்களைத் தாண்டித், தாண்டி

28,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெங்களூர் ஈஜிபுரா பகுதியில் கோதண்டராம சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒரே கல்லில் ஆன சுமார் 64 அடி உயரம், 11 முகங்கள், 22 கைகள் கொண்ட பிரம்மாண்ட கோதண்டராம சுவாமி சிலையும், 7 தலை பாம்புடன் கூடிய ஆதிசேசன் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. பீடத்துடன் சேர்த்து மொத்தம் 108 அடி உயரத்தில் அமைக்கலாம் என கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. 

ஆனால் இதற்கான சிற்பம் வடிக்கும் தொழில் நுட்பம் தமிழகத்திலேயே உள்ள நிலையில், இதை செதுக்க ஒரே கல்லினாலான பாறை தேவைப்பட்டது. இதற்கான பாறையும் தமிழகத்தில் எளிமையாக கிடைத்தது. இந்தப் பாறை வந்தவாசி அருகே இருக்கிற கொரக்கோட்டை கிராமத்தில் இருப்பதை அறிந்து 66 அடி நீளம், 26 அடி அகலம் கொண்ட ஒரே கல்லில் அமைந்த பிரமாண்டமான மகாவிஷ்ணு சிலை முழுமையாக வடிவமைக்கப் பட்ட நிலையில், வாகனத்தில் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப் பட்டது. இந்த சிலை 240 டயர்கள் கொண்ட ராட்சத லாரியில் புறப்பட்டது. 

கிளம்பும்போதே ஏகப்பட்ட பிரச்சனைகள்: பாரம் தாங்காமல் டயர் மண் சாலையில் சிக்கி கொண்டது. இன்னும் கொஞ்ச நேரத்தில் லாரியின் 6 டயர்கள் டமார் டமார் வெடித்து சிதறின. இதனால் சாலையில் சென்று கொண்டிருந்த மக்கள் அலறி அடித்து கொண்டு ஓடினார்கள். ஒருவழியாக வெடித்த டயர்கள் எல்லாம் சரி செய்யப்பட்டு மீண்டும் லாரி கிளம்பியது. நேற்று திண்டிவனம் அருகே உள்ள வெள்ளிமேடுப்பேட்டை அருகே வந்தபோது, சாலையின் இருபுறங்களிலும் இருந்த கடைகளை இடித்து சென்றது சிலை. மேலும் வீடுகளும் இடியும் சூழ்நிலை உருவானது. மற்றொரு பக்கம் மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. கடைகளும், வீடுகளும் விழுந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். எல்லோரும் சேர்ந்து வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் குதித்தனர். 

கடைகளும் போச்சு, வீடுகளும் போச்சு, எங்களுக்கு உரிய இழப்பீடு வேண்டும் என்று கேட்டு மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து காவல்துறையினர் விரைந்து மக்களுடன் சமாதான பேச்சுவார்த்தையில் இறங்கினார்கள். பிறகு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று உறுதி தந்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. அதன்பின்னரே சிலை அங்கிருந்து நகரத் தொடங்கியது. இந்த போராட்டம் காரணமாக கிட்டத்தட்ட 4 மணி நேரத்துக்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன் வாகனங்களும் வேறு பாதையில் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,001.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.