Show all

பாஜகவை கைவிட்டுவிட்டாரா ரஜினி!

28,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியிடம் பாஜக ஆட்சியை பறிகொடுத்துள்ளது. இந்த 3 மாநிலங்களும் பாஜகவின் கோட்டையாக கருதப்பட்ட மாநிலங்கள். பாஜகவின் கோட்டையை தகர்த்ததன் மூலம் வரும் மக்களவைத் தேர்தலில் மோடி அரசை வீழ்த்தி விடலாம் என்ற நம்பிக்கை காங்கி ரஸுக்கு ஏற்பட்டுள்ளது. அதேநேரத் தில் இந்த படுதோல்வி பாஜகவை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

5 மாநில தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் அரங்கில் எழுந்துள்ளது. இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, ''மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை எளிதில் சரி செய்து விடுவோம். இந்த 3 மாநிலங்களிலும் மக்களவைத் தேர்தலில் பெரும்பாலான இடங்களை பெறுவோம். ஆனால், இந்த தோல்வி பாஜக வலுவாக இல்லாத தமிழகம் போன்ற மாநிலங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக, அதிமுக ஆகியவை பாஜகவுடன் கூட்டணி அமைக்க முன்வரவில்லை. ஆனால், தேமுதிக, பாமக, மதிமுகவுடன் கூட்டணி அமைத்து 19 விழுக்காடு வாக்குகளையும், 2 பாராளுமன்ற உறுப்பினர் தொகுதிகளையும் பெற்றோம். தற்போது 3 மாநிலங்களில் ஏற்பட்டுள்ள தோல்வியால் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இதுபோன்ற கூட்டணியை அமைக்க முடியாது' என்றார்.

அதே நேரத்தில் 5 மாநில தேர்தல் முடிவுகளால் தமிழக காங்கிரஸில் உற்சாகம் கரை புரண்டோடுகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் நிலைக்கு தள்ளப் பட்டது. ஆனால், இந்தத் தேர்தலில் திமுக, மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி என வலுவான கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது.

இதுதொடர்பாக முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸிடம் கேட்டபோது, ''3 மாநில தேர்தல் வெற்றி காங்கிரஸுக்கு புது ரத்தத்தை பாய்ச்சியுள்ளது. தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் மதச்சார்பற்ற கூட்டணியை மேலும் வலுப்படுத்தியுள்ளது. திமுக - காங்கிரஸ் கூட்டணி 40 இடங்களையும் வெல்லும்' என்றார்.

பாஜகவுக்கு ஆதரவாக இதுவரை ஒவ்வொரு முறையும் கருத்து தெரிவித்து வந்த ரஜினி காந்த், ''5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பெரும் பின்னடைவுதான். பாஜக தனது செல்வாக்கை இழந்து வருவதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது' என கூறியிருப்பது தமிழக பாஜக வினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ரஜினியே பாஜகவை கைவிட்டு விட்டதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,001.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.