Show all

கூடுதல் பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கும் கீழடி! கூடுதல் பாதுகாப்பை ஆர்வலர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

கீழடியில் அதிகப்படியான கூட்டம் நிரம்பவும் பணியாற்றும் நபர்களுக்குத் தொந்தரவு ஏற்படுவதாகக் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதனடிப்படையில், சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரோகித்நாத், கீழடியைப் பார்வையிட்ட பின் சில கட்டுப்பாடுகளை விதித்துச் சென்றுள்ளார்.

16,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பே தனித்த அடையாளத்தோடும், பண்பாட்டோடும் தமிழர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கான சான்றுகள் கீழடியை உலக அளவில் தூக்கி நிறுத்தியுள்ளது. 

சாதி, சமயங்கள் என்று எந்த அடையாளத்திற்கும் பிடி கொடுக்காமல், தமிழர் என்ற அடையாளத்தைப் பறைசாற்றும் விதமாக கீழடிச் சான்றுகள் உள்ளது தமிழர்களை பெருமிதம் கொள்ளச் செய்வதாய் இருக்கிறது.

சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்டு, மதுரைக்கு அருகே அமைந்துள்ள கீழடியில், தற்போது 5-ம் கட்ட அகழாய்வுப் பணி நூற்றிப் பத்து நாட்களை கடந்து தொடர்கிறது. கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வுப் பணி இன்னும் சில நாட்களில் நிறைவுபெற உள்ளதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்களும், தொல்லியல் ஆர்வலர்களும் வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர்.

இந்நிலையில், கீழடியில் அதிகப்படியான கூட்டம் நிரம்பவும் பணியாற்றும் நபர்களுக்குத் தொந்தரவு ஏற்படுவதாகக் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதனடிப்படையில், சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரோஹித்நாத், கீழடியைப் பார்வையிட்ட பின் சில கட்டுப்பாடுகளை விதித்துச் சென்றுள்ளார். அதில், 

கீழடி அகழாய்வுப் பணியைப் பார்வையிட 30 நிமிடங்களுக்கு 100 பேர் மட்டும் அனுமதிக்க வேண்டும்.
மேலும், கீழடி அகழ்வாராய்ச்சியில், 32 குழிகளை மட்டுமே பார்வையிட அனுமதிக்க வேண்டும். அருகே மற்றொரு இடத்தில் 22 குழிகளில் நடைபெறும் அகழ்வாராய்ச்சிகளைப் பார்வையிட பார்வையாளர்கள் மற்றும் ஊடகத்தினரை அனுமதிக்கக்கூடாது. பள்ளி, கல்லூரிகளில் இருந்து பார்வையிட வந்தால், அனுமதிக் கடிதம் பெற்ற பின்னரே அனுமதிக்க வேண்டும். யாரும் குழிகளுக்கு மிக அருகில் செல்லக்கூடாது எனப் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக தொல்லியல்துறை மற்றும் காவல்துறையினருக்கு உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

கீழடியில் பாதுகாப்புப் பணியில் 20 காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். பல கிலோ மீட்டர் பயணித்து வந்த தொல்லியல் ஆர்வலர்கள், முழுமையாக தொல்லியல் ஆய்வைப் பார்வையிட முடியவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளனர். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,294.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.