Show all

கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது!

கத்திரி வெயில் காலம் இன்று தொடங்குகிறது. இரண்டு கிழமைகள் இது நீடிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
    
21,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருக்கும் நிலையில், கத்திரி வெயில் காலம் இன்று தொடங்குகிறது. இரண்டு கிழமைகள் இது நீடிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்றும் இயல்பான அளவை விட 5 புள்ளி வரை வெப்பநிலை உயரும் என்று வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் முந்தாநாள் நேற்று 13 இடங்களில் 100 புள்ளியைத் தாண்டி வெயில் கொளுத்தியது. இன்று கத்திரிவெயில் தொடங்கியுள்ள நிலையில் வெயில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக பகல் நேரத்தில் பொதுமக்கள் கட்டாயத்தேவைக் காரணங்களை தவிர வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். வெப்பத்தை தணிக்க இளநீர், மோர் உள்ளிட்ட இயற்கை குடிப்புகளை அருந்துவது நல்லது என மருத்துவர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.

இந்நிலையில், நேற்று கோவை சூலூர், உக்கடம், ஆத்துப்பாலம், குனியமுத்தூர், இராமநாதபுரம், மதுக்கரை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. 

தருமபுரி மாவட்டம் சக்கம்பட்டி கிராமத்தில் அடைமழை (கனமழை) மற்றும் பலத்த காற்றின் காரணமாக மின்கம்பி அறுந்து விழுந்ததில் ஐம்பது அகவை முனியப்பன் என்பவர் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,238.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.