Show all

சித்திரை முழு நிலவு விழா! சேரன் செங்குட்டுவன் கட்டிய கண்ணகிக் கோட்டத்தில், கேரள அரசு அனுமதியோடு

02,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தேனி மாவட்டம், கூடலூர் அருகே தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா 16,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120 அன்று (29.04.1018) நடைபெற உள்ளதால், அதற்கான முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழர் வீரத்தைப் பழித்து பேசிய, கனக விசயர் தலையில் கல்லையேற்றி, இமயத்திலிருந்து வழிநடத்தி வந்து, சேரன் செங்குட்டுவனால் கட்டப் பட்ட மங்கலதேவி கண்ணகி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முழு நிலவு விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு, குமுளியிலிருந்து வண்டிகள் மூலமும், கூடலூரில் இருந்து பளியன்குடி வழியாக நடைபயணமாகவும் பக்தர்கள் கண்ணகி கோயிலுக்குச் சென்று வருவர். ஏனைய நாள்களில் வனப் பகுதி வழியாக கண்ணகி கோயிலுக்குச் சென்று வர பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

     இந் நிலையில், மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும், போக்குவரத்து, குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள், வனப் பகுதி வழியாக கோயிலுக்குச் சென்று வரும் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் ஆகியன குறித்தும், காவல் துறை, வனத் துறை, சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, போக்குவரத்துத் துறை உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகளுடன், மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வீ. பாஸ்கரன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

தமிழ்நாடு - கேரளா எல்லைப் பகுதியில் உள்ள மலைப்பகுதியில் இந்த மங்கலதேவி கண்ணகி கோயில் மாநிலங்களுக்கிடையிலான எல்லைப் பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருக்கிறது. இந்தக் கண்ணகி கோவிலின் முகப்பு வாயில், மதுரையை நோக்கியே அமைந்துள்ளது. தமிழ்தொடர்ஆண்டு-4918ல் (1817) கிழக்கிந்திய கம்பெனி நடத்திய நிலஅளவை மிகவும் பழமையானது. இந்த நிலஅளவையில், கண்ணகி கோவில் தமிழக எல்லைப் பகுதியிலேயே இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 

கடந்த தமிழ்தொடர்ஆண்டு-5060 வரை (1959) கேரள அரசு, கண்ணகி கோவில் எல்லை குறித்து எவ்வித ஆட்சேபனையும் எழுப்பவில்லை. தமிழ்தொடர்ஆண்டு-5077ல் (1976) தமிழ்நாடு கேரள அரசு அதிகாரிகள் கூட்டாக நடத்திய நிலஅளவையிலும், கண்ணகி கோவில் கேரள எல்லையில் இருந்து 40 அடி தூரம் தள்ளி தமிழகப் பகுதியில் இருப்பது ஒப்புக் கொள்ளப்பட்டது.

இதற்கிடையில், கூடலூரில் மங்கலதேவி கண்ணகி கோட்ட சீரமைப்புக்குழு தொடங்;கப்பட்டு கோவிலைப் புதுப்பிக்க திட்டமிடப்பட்டது. இந்தச் சீரமைப்புக் குழு, அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதியைச் சந்தித்து உதவி கேட்டது. கூடலூரைச் சேர்ந்த, கே.பி.கோபால் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது கண்ணகி கோவிலுக்கு செல்லப் பாதை அமைக்க வேண்டும் என சட்டமன்றத்தில் பேசினார். இதனைத் தொடர்ந்து, தமிழகப்பகுதி வழியாக கண்ணகி கோவிலுக்கு சாலை போடுவதற்காக ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த வேலை பாதி நடந்து கொண்டிருந்த போது கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி பதவி நீக்கம் செய்யப்பட்டது. இதனால் இத்திட்டம் தாமதப்பட்டது.

இந்த நிலையில் கேரள வனப்பகுதி வழியாக, தேக்கடியில் இருந்து கண்ணகி கோவிலுக்கு அவசர அவசரமாக கேரள அரசு ஒரு பாதை அமைத்தது. இவ்வாறு போடப்பட்ட இந்தப் பாதையின் வழியாகத்தான், தமிழக பக்தர்கள், கண்ணகி கோயிலுக்கு செல்ல வேண்டியிருந்தது. தற்போது இந்த சாலையை வைத்துக் கேரள அரசு கண்ணகி கோயில் கேரளாவிற்குச் சொந்தமானது என்று உரிமை கொண்டாடுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் வரும் சித்திரை முழுநிலவு தினத்தன்று இந்த மங்கலதேவி கண்ணகி கோயிலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் சிறப்பு வழிபாடுகள் செய்து வருகின்றனர். இந்தக் கோவில் வழிபாட்டிற்காக தமிழ்நாடு, கேரளா மாநில அரசுகளைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி அதன்படி வழிபாடு செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் இதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான குழுவும் கேரளா அரசு சார்பில் இடுக்கி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான குழுவும் பேச்சுவார்த்தைகள் நடத்தி சித்திரை முழுநிலவு திருவிழாவிற்கு பக்தர்களை அனுமதிக்கின்றனர். மற்ற நாட்களில் இங்கு செல்ல அனுமதி அளிக்கப்படுவதில்லை.

கேரள அரசின் பலவிதமான கட்டுப்பாடுகளுக்கு இடையே தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் சித்திரை முழுநிலவு நாளன்று மட்டும் இந்தக் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சித்திரை முழுநிலவு தவிர மற்ற நாட்களில் பக்தர்கள் செல்ல அனுமதியில்லாததால் இந்தக் கோயில் பராமரிப்பின்றி கோவிலின் பல பகுதிகள் சிதைந்து போய்விட்டன. கோவில் சுவற்றின் கற்கள் உடைந்து போய் கிடக்கின்றன. கண்ணகி சிலையும் சில ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போய்விட்டது. தற்போது, சித்திரை முழுநிலவு விழா நேரத்தில் சந்தனத்தால் கண்ணகி முகம் வடிவமைக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. இப்படியே சில காலம் கவனிக்காத நிலை தொடர்ந்தால் வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவில் அழிந்து போகும். கோவிலைக் காப்பாற்ற இரண்டு மாநில அரசுகளும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தக் கோயிலின் பக்தர்களும் தமிழ் ஆர்வலர்களும் தொடர்ந்து கோரி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை என்ற ஒரு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பில் சித்திரை முழுநிலவு நாளன்று கண்ணகி கோயிலில் வழிபாடுகள் செய்வதுடன் அங்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் செய்து வருகிறது. இந்த அமைப்பு தமிழ்நாட்டின் கூடலூர் (தேனி) மலைப்பகுதியிலுள்ள பளியங்குடியிலிருந்து கண்ணகி கோயிலுக்குத் தனிப்பாதை அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையுடன் கண்ணகி கோயில் தமிழ்நாட்டுக்குரியது அதை மீட்க வேண்டும் என்றும் கோரி வருகிறது.

கூடலூர் பளியங்குடி வழியாக மங்கலதேவி கண்ணகி கோயிலுக்குச் செல்லும் வழியில் கூடலூரைச் சேர்ந்த கந்தவேல் என்பவர் அவருக்குச் சொந்தமான இடத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு மங்கலதேவி கண்ணகி கோயில் என்ற பெயரில் புதிய கோயில் ஒன்றைக் கட்டியுள்ளார். இந்தக் கோயிலுக்கும் பக்தர்கள் வந்து வணங்கிச் செல்கின்றனர். இந்நிலையில் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள் பழமையான கோயில் தமிழ்நாடு- கேரள எல்லைப்பகுதியில் இருக்கும் நிலையில் புதிய கோயில் பக்தர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும். மேலும் இது மங்கலதேவி கண்ணகியைக் களங்கப்படுத்துவதாகவும் அமையும். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து காவல்துறையினரால் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,728.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.