Show all

முன்னாள் அமைச்சர் செல்வகணபதி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

12,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சேலம் குமாரசாமிப்பட்டி ராம்நகரில் தி.மு.க. தேர்தல் பணிக்குழு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.எம்.செல்வகணபதி வீடு உள்ளது.

இவரது வீட்டில் நேற்று நள்ளிரவில் மர்மக்கும்பல் வந்து பெட்ரோல் குண்டு வீசியது.

அப்போது செல்வ கணபதியின் மகன் அரவிந்த சாமி மருமகள் சுகன்யா ஆகியோர் இருந்தனர். அவர்கள் வெளியே வந்து பார்த்த போது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

காவல்துறையினர் விரைந்து வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

இந்தச் சம்பவம் நடந்த போது செல்வகணபதி வீட்டில் இல்லை. அவர் நேற்று மாலை சென்னை புறப்பட்டு சென்றிருந்தார். இதுகுறித்து தகவலறிந்த அவர் உடனடியாக சேலம் வந்தார். இன்று காலை தடவியல் நிபுணர்கள் வந்து பெட்ரோல் குண்டு வீசிய இடத்தில் சோதனை நடத்தி தடயங்களை சேகரித்தனர்.

பெட்ரோல் குண்டு வீசிய மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

செல்வ கணபதி வீட்டின் முன்பு நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசிய தகவல் பரவியதால் ஏராளமான தி.மு.க. தொண்டர்கள் செல்வகணபதியின் வீட்டின் முன்பு திரண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவியது. இதனால் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.