Show all

காலில் கடவுளின் உருவப்படத்தை டாட்டூ வரைந்திருந்த, ஆஸ்திரேலிய இளைஞரைச் சுற்றி வளைத்த கும்பல்.

காலில் கடவுளின் உருவப்படத்தை டாட்டூ வரைந்திருந்த, ஆஸ்திரேலிய இளைஞரைச் சுற்றி வளைத்த கும்பல் ஒன்று தங்கள் மத உணர்வுகளை அவர் புண்படுத்தி விட்டதாகக் கூறி மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மேத்யூ கார்டன் தனது தோழி எமிலியுடன் பெங்களூருவுக்கு சுற்றுலா வந்திருந்தார். கடந்த சனிக்கிழமை அங்குள்ள உணவகம் ஒன்றில் இருவரும் உணவருந்திக் கொண்டிருந்த போது, அவரது காலில் இந்து பெண் தெய்வமான எல்லம்மாவின் உருவம் டாட்டூவாக வரையப்பட்டிருந்ததை அங்கிருந்த சிலர் பார்த்தனர்.

இதையடுத்து, அவர்கள் வேறு சிலருக்கு தகவல் அளிக்க, திடீரென அந்த உணவகத்தில் ஏராளமானோர் கூடி விட்டனர். சற்று நேரத்தில் இந்த கும்பல் மேத்யூவைச் சுற்றி வளைத்து, காலில் வரையப்பட்டிருந்த டாட்டூவை அழிக்கச் சொல்லி வற்புறுத்தினர். மேலும் மேத்யூஸ் மற்றும் அவரது காதலி குறித்து தகாத வார்த்தைகளையும் அவர்கள் பயன்படுத்தினர்.

தொடர்ந்து அங்கு வந்த போலீசார், கேவலமான வார்த்தைகளை உபயோகித்து ஒரு வெளிநாட்டவரை அச்சுறுத்திய அந்தக் கும்பலைக் கொஞ்சமும் கண்டிக்காமல், மேத்யூ கார்டன், எமிலி ஆகியோரை அந்த கும்பலிடம் மன்னிப்பு கேட்க கூறியுள்ளனர். மேலும், அவர்களைக் காவல் நிலையம் அழைத்து சென்று மத உணர்வுகளை புண்படுத்தியதற்காக மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கி விட்டு அனுப்பினர்.

இச்சம்பவம் குறித்து கார்டன் கூறுகையில், என் தோலை அறுத்தெடுத்து, டாட்டூவை அழிக்கப்போவதாக என்னை அவர்கள் அச்சுறுத்தினர். ஒரு நிமிடம் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போய் விட்டேன். பின்னர் போலீசார் எனக்கு இந்து மதம் குறித்து அறிவுரை வழங்கினர். என் தோழி உடலாலும் சரி, வார்த்தைகளாலும் சரி பாலியல் பலாத்காரத்தை பொறுத்துக் கொள்ள முடியாதவள். அதனால் நான் அவர்களுக்கு மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தேன். இந்தக் கசப்பான அனுபவத்தால் விரைவில் பெங்களூருவில் இருந்து வெளியேற வேண்டும் என்ற எண்ணமும் ஏற்பட்டுள்ளது என்றார்.

தனது மன்னிப்பு கடிதத்தை பேஸ்புக்கிலும் பதிவேற்றியுள்ள மேத்யூ, எனக்கு இந்து மதத்தை மிகவும் பிடிக்கும். 35 மணி நேரம் செலவு செய்து என் முதுகில் விநாயகரின் படத்தையும் 4 மணி நேரம் செலவு செய்து காலில் அம்மனின் படத்தையும் வரைந்தேன் என்று விளக்கமளித்துள்ளார். அவரது இந்தப் பதிவு வைரலானதையடுத்து, அவரை தொடர்பு கொண்டுள்ள போலீசார், அந்த கும்பல் மீதும், அழுத்தம் கொடுத்த போலீஸ்காரர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.