Show all

கண்ணியம் காத்தார் செந்தில் பாலாஜி! நல்லா வருவீங்க செந்தில் பாலாஜி; வாழ்த்துக்கள்.

28,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: திமுகவில் இணைந்த பிறகு நிருபர்களிடம் செந்தில் பாலாஜி கூறியதாவது: கரூர் மாவட்ட மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தளபதி முன்னிலையில் திமுக உறுப்பினராக என்னை இணைத்துக் கொண்டுள்ளேன்.

எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் மக்கள் விரோத ஆட்சி நடத்தி வருகிறார்கள். பாஜகவிற்கு அடி பணிந்து தமிழக உரிமைகளை விட்டுக்கொடுத்து வருகிறார்கள். தமிழக உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வருபவர் ஸ்டாலின். அவர் கரத்தை வலுப்படுத்த திமுகவில் இணைந்தேன்.

எப்போது நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல் வந்தாலும், அதிமுக ஆட்சியை தூக்கி எறிந்து ஸ்டாலின் தலைமைக்கு, மக்கள் வாக்களிப்பார்கள். தமிழக அடுத்த முதல்வராக ஸ்டாலினை அமர வைப்பார்கள். நான் இருக்கின்ற இயக்கத்தில் நான் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றியுள்ளேன். 22 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவில் இணைந்து, ஜெயலலிதா தொடர்ந்து பணியாற்றினேன். பிறகு ஒரு தலைமையை ஏற்று செயல்பட்டேன். இப்போது இருள் அகன்று, ஸ்டாலின் மீதான ஈர்ப்பால் திமுகவில் இணைந்துள்ளேன் என்று கூறினார்.

மனதில் இருந்த இருள் அப்படியென்று தினகரனை குறிப்பிடுகிறீர்களா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு, செந்தில் பாலாஜி பதிலளிக்கையில், ஒரு தலைமையின்கீழ் பணியாற்றியுள்ளேன். தலைமையும், என்னுடன் பணியாற்றியவர்களும் நான் தனியாக செல்வதால் ஆதங்கத்தில் ஏதாவது கருத்து சொல்லியிருப்பார்கள். அந்த கருத்துகளுக்கு நான் பதில் சொன்னால் அது பண்பாக இருக்காது. அவர்களுக்கு நான் திமுகவில் இணைவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அதன் வெளிப்பாடாகப் பார்க்கிறேன் என்று, கண்ணியம் காப்பதில் கவனமாக இருந்தார்.

மேலும் அவர் கூறுகையில், எடப்பாடி, பன்னீர்செல்வம் செயல்படும் இயக்கம் ஒரு மூழ்கும் கப்பல். கடந்த சட்டமன்றத் தேர்தலில் செயலலிதா முதல்வராகத்தான் மக்கள் வாக்களித்தார்களே தவிர எடப்பாடி, பன்னீர்செல்வம் முதல்வர்களாக வாக்களிக்கவில்லை. அரசு கவிழும் வரை எடப்பாடி முதல்வராக இருப்பார். பிறகு, வேளாண் தொழில்தான் பார்க்க வேண்டும். நான் ஒரு மாதகாலமாக நான் சார்ந்திருந்த இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற எந்த நிகழ்ச்சியிலும் நான் பங்கேற்கவில்லை. ஸ்டாலின் மீதான ஈர்ப்பால் ஒரு மாதகாலமாக நான் களப்பணியில் இருந்து விலகியிருந்தேன் என்றார்.

நடுவண் அரசை எதிர்ப்பதில் தினகரன் பலமிழந்துவிட்டார் என கருதுகிறீர்களா, என்ற நிருபர்கள் கேள்விக்கு, இருந்த இயக்கத்தையும், தலைமையையும் பற்றி நான் கருத்து கூறுவது, நல்ல மரபாக, பண்பாக இருக்காது. எனவே அதுபற்றி கருத்து கூற மாட்டேன். இவ்வாறு செந்தில் பாலாஜி தெரிவித்தார். பேட்டியில் எங்குமே தினகரன் பெயரையோ, அமமுக பெயரையோ இவர் கூறவில்லை. வழக்கமாக கட்சி மாறி வருவோர் முந்தைய தலைமையை கிழித்து தொங்கவிடுவார்கள். ஆனால், செந்தில் பாலாஜி அதிமுக தலைமையை விமர்சித்தாரே தவிர, அமமுக தலைமையை பற்றி வாய் திறக்கவில்லை. நல்லா வருவீங்க செந்தில் பாலாஜி! வாழ்த்துக்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,001.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.