29,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் செயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு மனைச்சொத்தில் உள்ள முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதை மறைக்கவே அவரது கார் ஓட்டுநர் கனகராஜ் உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர் என்று சயான் என்பவர் முந்தாநாள் டெல்லியில் பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்தார். மேலும், கோடநாடு கொள்ளை, கொலை தொடர்பான ஆவணப் படத்தையும் வெளியிட்டு, பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டனர். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், முந்;தாநாள் இரவு அதிமுக தொழில் நுட்பப் பிரிவு மாநில இணை செயலாளர் ராஜன் சத்யா என்பவர் சென்னை நடுவண் குற்றப்பிரிவு காவல்துறையில் இது தொடர்பான புகார் மனு அளித்தார். அந்தப் புகாரின் பேரில், சயான், தெகல்கா புலனாய்வு இதழின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல், மற்றொருவர் மனோஜ் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், மேத்யூவைப் பிடிக்க தனிப்படை காவலர்கள் டெல்லி சென்றனர். சயனை பிடிக்கவும் கேரளா சென்றனர். கோடநாடு காணொளி விவகார புகாரில் சயான், மனோஜ் ஆகியோரை சென்னையில் இருந்து சென்ற தனிப்படை காவல்துறையினர் டெல்லியில் கைது செய்ப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் இருந்து சென்ற தனிப்படை காவல்துறையினர் கைது செய்யப்பட்ட சயான், மனோஜ் ஆகியோரை இன்று இரவு சென்னை அழைத்து வரப்படுவார்கள் என்று தெரிகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,031.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.