ரிசர்வ் வங்கியை
முற்றுகையிட்டதற்காக டெல்லியில் கைது செய்யப்பட்ட விவசாயி அய்யாக்கண்ணு இன்று மாலை
விடுவிக்கப்பட்டார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்; விவசாயிகளின்
கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர்
மந்தரில் 25 நாட்களாக அறவழியில் போராடி வருகின்றனர் தமிழக விவசாயிகள். தமிழக அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள்
என பலரும் டெல்லியில் விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதிமுக, திமுக
பாராளுமன்றஉறுப்பினர்கள், தமிழக அமைச்சர்கள் பலரும் டெல்லி சென்று விவசாயிகளை சந்தித்து
பேசினர். டெல்லியில் குடிஅரசுத் தலைவர் மற்றும் நடுவண் அமைச்சர்களையும் விவசாயிகள்
சந்தித்து பேசினர். கடன்களைத் தள்ளுபடி செய்வதாக அறிவிக்கும் வரை
போராட்டத்தை கைவிடமாட்டோம் என அறிவித்தனர் விவசாயிகள். ஒரு பக்கம் மீசை மழித்தல், மொட்டை
அடித்தல், உருண்டு புரளுதல், தலைகீழாக நிற்பது என பல நூதனப் போராட்டங்களை விவசாயிகள்
முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் போராட்டத்தின் 25-வது நாளான இன்று
டெல்லியில் ரிசர்வ் வங்கி அலுவலகம் முன்பாக முற்றுகைப் போராட்டத்தை விவசாயிகள் நடத்தினர்.
அப்போது தமிழக விவசாயிகள் மீது கொடூரமான தடியடியை டெல்லி காவல்துறையினர் நடத்தினர். டெல்லி காவல்துறை நடுவண் அரசின் நேரடி கட்டுப்பாட்டில்
உள்ளது. நடுவண் அரசுக்கு நெருக்கடி தரும் வகையில் தமிழக விவசாயிகள் போராடுவதால் இந்த
கொடூர வன்முறையை டெல்லி காவல்துறை மூலம் ஏவிவிட்டது நடுவண் அரசு. பின்னர் அனைவரையும் கைது செய்து போராட்டக் களமான
ஜந்தர் மந்தரில் இறக்கிவிட்டது. ஆனால் போராட்டக் குழு தலைவர் அய்யாகண்ணுவை மட்டும்
மந்திர் மார்க் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து அய்யாக்கண்ணுவை விடுவிக்க கோரி ஜந்தர்
மந்தரில் சாலை மறியல் போராட்டத்தை விவசாயிகள் நடத்தினர். இதையடுத்து மாலையில் விவசாயி
அய்யாக்கண்ணுவை காவல்துறையினர் விடுவித்தனர். இதையடுத்து போராட்டம் நடைபெறும் ஜந்தர்
மந்தர் பகுதிக்கு அய்யாக்கண்ணு மீண்டும் திரும்பியுள்ளார். தற்போது நடுவண் அரசு நேரடியாக விவசாயிகளைத் தாக்கியும்
கைது செய்தும் வருகிறது. இப்படி தமிழக விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைக்கும் முயற்சியில்
நடுவண் அரசு இறங்கியிருப்பது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.