சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ
உள்ளிட்ட பாடத் திட்டங்களில் கல்வி கற்றுக்கொடுக்கப்படும் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும்
12ஆம் வகுப்பு வரை மலையாளப் பாடம் கட்டாயம் என கேரள அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு
உதவி பெறாத பள்ளிகள், சுய நிதி கல்வி நிறுவனங்கள், சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பாடத்
திட்டங்களில் கல்வி கற்றுத்தரும் பள்ளிகள் என அனைத்து வகை பள்ளிகளுக்கும் 12ஆம் வகுப்பு
வரை மலையாளம் கட்டாயம். இப்படி ஒரு அவசர சட்டத்தை கொண்டுவர சில நாட்கள்
முன்பு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெற்றார் முதல்வர் பினராயி விஜயன்.
அவசர சட்டத்திற்கு ஆளுநர் சதாசிவம் இன்று கையெழுத்திட்டுள்ளார். எனவே இந்தக் கல்வியாண்டு
முதலே சட்டம் அமலுக்கு வந்துவிடும். அதிகாரப்பூர்வமாக மே 1ம் தேதி முதல் சட்டம் அமலுக்கு
வருவதாக அவசர சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்வேறு கல்வி நிறுவனங்களில் ஆங்கிலத்தில் பேசுவதை
ஊக்குவிப்பதாகவும், மலையாளம் பேசுவது தடை செய்யப்படுவதாகவும் வந்த புகார்களைத் தொடர்ந்து
கேரள அரசு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த சட்டத்தை மீறும் பள்ளிகளுக்கு மிக அதிக அளவு
அபராதம் விதிக்கப்படும். மலையாளத்தில் பேசக்கூடாது என உத்தரவு பிறப்பிப்பது, பலகைகளில்
எழுதி வைப்பது இனிமேல் இருக்க கூடாது. மலையாளம் பேசாத, மாணவர்கள், ஆசிரியர்கள் மீது
நடவடிக்கை எடுக்கவும் சட்டம் வகை செய்கிறது. இந்தியா முழுக்க மக்களின் அடிப்படைகளை பாதுகாக்கிற
எந்தத் திட்டத்திற்கும் தமிழகம்தான் முன்னோடி என்கிற போதும், சில காலமாக திமுகவும்
அதிமுகவும் ஒன்றுக்கொன்று குழி பறித்து குப்புற வீழ்த்தும் வேலைகளிலேயே முழுக்கவனம்
செலுத்துவதால், மற்ற மாநிலங்கள் செயல் படுத்தத் தொடங்கி விட்டன. நல்லது நடக்கட்டும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.