Show all

உயர் அறங்கூற்று மன்றம் மதுரைக்கிளைன்னாலே சும்மா அதிருதில்ல

13,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119 புதுக்கோட்டை ஆவுடையார் கோவிலைச் சேர்ந்த எம்.ஆர்.எம். ராமையா எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிர்வாக இயக்குநர் ராமையா, மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை விற்பனை செய்ய அனுமதி வழங்க கோரி உயர் அறங்கூற்றுமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

      ‘நடுவண் அரசிடம் உரிமம் பெற்று மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் இருப்பு வைத்திருப்பதாகவும், இதனை வெளியே எடுத்துச் செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்வது, அதை விற்பனை செய்வது என்பது நடுவண் அரசின் சட்டத்துக்கு உட்பட்டது. இதில் மாநில அரசு அதிகாரிகள் தலையிட முடியாது என்றும், எனவே மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை வாடிக்கையாளர்களுக்கு வழங்க அனுமதி வழங்க வேண்டும், பறிமுதல் செய்த லாரிகளையும் அதில் இருந்த மணலையும் திரும்ப ஒப்படைக்கவும் உத்தரவிட வேண்டும்

என்று அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.

      வழக்கை விசாரித்த அறங்கூற்றுமன்றம், தூத்துக்குடி துறைமுகத்தில் முடங்கி கிடக்கும் மலேசிய மணலை எடுத்து செல்ல அனுமதி வழங்கி இன்று உத்தரவிட்டது. அத்துடன்,  வெளிநாடுகளில் இருந்து மணலை இறக்குமதி செய்ய தமிழக அரசு உரிய அனுமதி அளிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

      தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்திற்குள் மூட வேண்டும். புதிதாக மணல் குவாரிகளை திறக்க அனுமதிக்க கூடாது.  சட்டவிரோதமாக மணல் எடுத்து செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

      மதுரைக் கிளை உயர் அறங்கூற்று மன்றத் தீர்ப்பு என்றாலே தமிழக பட்டிமன்ற நடுவர்களின் மக்கள் விரும்பும் வலுவான இனிமையான தீர்ப்பு போல நச்சென்று இருக்கும் என்ற கருத்து தமிழகத்தில் உலா வருவது குறிப்பிடத் தக்கது.

-      தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,621

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.