Show all

நாற்பத்தி மூன்று நாட்கள் தொடரும் சிறப்பு முகாம்! மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க

தமிழ்நாட்டில் உள்ள 2,811 மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் நாளை முதல் தொடர்ந்து 43நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. விழா நாட்களைத் தவிர்த்து, ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாட்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை சிறப்பு முகாம்கள் செயல்படும்.

11,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5124: மின் இணைப்புடன் ஆதார் எண்ணை, தமிழ்நாட்டு மின்நுகர்வோர் இணைத்துக் கொள்ளும் வகைக்கு, நாளை முதல் தொடங்கவிருக்கிற சிறப்பு முகாம் 43நாட்கள் தொடரவுள்ளது. என்று மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 2.30 கோடி வீட்டு மின் இணைப்புகளும், 22 லட்சம் வேளாண் மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் உள்ளன. இந்நிலையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தமிழ்நாடு மின் வாரியம் தெரிவித்து, அதற்கானப் பணிகளைத் தொடங்கியுள்ளது.

இதன்படி, மின் நுகர்வோர் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு, ஆதார் எண்ணை இணைக்குமாறு மின்வாரியம் குறுஞ்செய்தியை அனுப்பி வருகிறது.

மின் நுகர்வோர் தங்களது பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு வைத்திருந்தாலும், ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம் எனவும் மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, ஆதார் எண்ணை இணைத்தால்தான் மின் கட்டணம் செலுத்த முடியும் என்று மின் வாரியம் உத்தரவிட்டது. மின் நுகர்வோர் அனைவரும் ஒரே நேரத்தில் மின் வாரிய இணையதளம் சென்று, தங்களது மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் மின் வாரிய இணையதள சேவை முடங்கியது. ஆதார் எண்ணை இணைக்க முடியாமலும், மின் கட்டணத்தைச் செலுத்த முடியாமலும் நுகர்வோர் அவதிக்குள்ளாகினர்.

இது தொடர்பாக நுகர்வோர் தரப்பில் இருந்து ஏராளமான புகார்கள் அனுப்பிவைக்கப்பட்டன. இதையடுத்து, மின் கட்டணம் செலுத்த 2 நாட்கள் கூடுதல் காலக்கெடுவை வழங்கி, மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. ஆனாலும், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க, மின் வாரிய அலுவலகங்களில் நுகர்வோர் குவிந்தனர். ஒரே நேரத்தில் ஏராள மானோர் ஆதார் எண்ணை இணைக்க முயன்றதால், மின் வாரியத்தின் இணையதள சேவை மீண்டும் முடங்கியது.

இதையடுத்து, ஆதார் எண்ணை இணைக்காவிட்டாலும், மின் வாரிய அலுவலகங்களில் மின் கட்டணம் செலுத்தலாம். ஆனால், ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே, இயங்கலையில் மின் கட்டணம் செலுத்த முடியும் என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மின் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் வேளாண் மின் இணைப்புதாரர்கள், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள 2,811 மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் நாளை முதல் தொடர்ந்து 43நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. விழா நாட்களைத் தவிர்த்து, ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாட்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை சிறப்பு முகாம்கள் செயல்படும்.

மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதால், வீடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் 100 அலகு இலவச மின்சாரத்தில் எவ்வித மாற்றமும் இருக்காது.

அதேபோல, கைத்தறி, விசைத்தறி மின் நுகர்வோருக்கு வழங்கப்பட்டு வரும் மானியம் மற்றும் குடிசை, வேளாண் மின் இணைப்புகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,445.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.