Show all

மீண்டும் தொடங்கியது ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் போராட்டம்! தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி நிரந்தரமாக மூடுக

21,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுக என்ற முழக்கங்களுடன் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் கிராம மக்கள் நேற்று மீண்டும் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி கடந்த மே மாதம் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து தற்காலிக நடவடிக்கையாக, சட்டமன்றம், சட்டவல்லுனர்கள், எதிர்க்கட்சிகள் என்று யாரிடமும் ஆலோசனை பெறாமல், பலதரப்பிலிருந்தும் இது ஒன்றுக்கும் உதவாத அரசாணை என்று அறிவுறுத்தப் பட்டும் என்ன காரணம், மற்றும் நோக்கம் பற்றியோ பெயருக்கு ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு ஓர் அரசாணை வெளியிட்டது. இதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

ஆலை மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. தேசிய பசுமை தீர்ப்பாயம் சார்பாக அமைக்கப்பட்ட அறங்கூற்றுவர் தருண் அகர்வால் தலைமையிலான குழுவினர் ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ததாகக் கூறிக்கொண்டு, சில நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. 

இதற்கு தூத்துக்குடி பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்று வலியுறுத்தி நேற்று, பொதுமக்கள் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்கள் கொடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டமன்றத்தை கூட்டி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி பண்டாரம்பட்டி கிராம மக்கள் நேற்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊரின் மையப்பகுதியில் அமர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இது தொடர்பாக போராட்ட குழுவை சேர்ந்த வழக்கறிஞர் அரிராகவன் மற்றும் பண்டாரம்பட்டி பகுதி பெண்கள் கூறுகையில், 

தமிழக அரசு சட்டமன்றத்தை கூட்டி, தூத்துக்குடி மக்களை பாதுகாக்க தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்றனர்.  

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,994.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.