சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் பாஜகவின் முயற்சி மற்ற மாநிலங்களில் வேண்டுமானால் எடுபடும் ஆனால் டெல்லியில் எடுபடாது எனக் கூறிய டெல்லிமுதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் பாஜகவின் வழக்கமான 'அடாவடித் தாமரை' முன்னெடுப்பு தோல்வி அடைந்துவிட்டதாக தெரிவித்தார். 17,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி அரசை கவிழ்க்க முயற்சிப்பதாக (அடாவடி தாமரை) ஒன்றிய பாஜக அரசு மீது டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார். இதில் முதன்மையாக, கலால் கொள்கை வழக்கில் சிக்கவைக்கப்பட்டுள்ள டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, தான் ஆம் ஆத்மியை விட்டு விலகினால் தன் மீதான வழக்குகளை திரும்பப் பெறலாம் என பா.ஜனதா கூறியதாக ஏற்கனவே அம்பலப்படுத்தி இருந்தார். இதைப்போல பல சட்டமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தியும், பணம் கொடுத்தும் தன் பக்கம் இழுக்க முயற்சிப்பதாக ஆம் ஆத்மி பகீர் குற்றச்சாட்டை கிளப்பி இருந்தது. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ரூ.20 கோடி வரை பேரம் பேசப்படுவதாகவும் புகார் கூறப்பட்டது. இந்நிலையில் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் பாஜக வசம் செல்லவில்லை என்பதை நிரூபிப்பதற்காக டெல்லி சட்டமன்றத்தில் டெல்லிமுதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தாமாக முன்வந்து நம்பிக்கை வாக்கு கோரினார். அப்போது ஆம் ஆத்மியின் 62 சட்டமன்ற உறுப்பினர்களில் 58 பேர்கள் அரவிந்த் கெஜ்ரிவால் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். எஞ்சியுள்ள 4 பேரில் ஒருவர் பேரவைத்தலைவர். அவைக்கு வராத 3 ஆம்ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களில் இருவர் வெளிநாடுகளில் உள்ளதாகவும், ஒருவர் சிறையில் உள்ளதாகவும் கெஜ்ரிவால் விளக்கம் அளித்தார். இதன் மூலம் டெல்லி சட்டப்பேரவையில் தமது அரசுக்கு உள்ள பெரும்பான்மையை மீண்டும் கெஜ்ரிவால் நிரூபித்தார். பின்னர் சட்டமன்றத்தில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களின் நேர்மையை நிரூபிக்கும் விதமாகவே தாம் அவையில் நம்பிக்கை வாக்கு கோரியதாக தெரித்தார். சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் பாஜகவின் முயற்சி மற்ற மாநிலங்களில் வேண்டுமானால் எடுபடும் ஆனால் டெல்லியில் எடுபடாது எனக் கூறிய டெல்லிமுதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் பாஜகவின் வழக்கமான 'அடாவடித் தாமரை' முன்னெடுப்பு தோல்வி அடைந்துவிட்டதாக தெரிவித்தார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,359.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.