Show all

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி நாளாகும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி நாளாகும். எனினும், இன்று அரசு விடுமுறை என்பதால் ஆன் லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பம் வழங்கவும் பெறவும் பட்டதைக் காணமுடிந்தது.

2016, ஜனவரி 1 ஆம் தேதியுடன் 18 வயது பூர்த்தியாகிறவர்கள், தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதுமட்டும் அல்லாமல், வாக்காளர் பட்டியலில் இதுவரை பெயர் சேர்க்க தவறியவர்களும் பெயர் சேர்த்துக்கொள்வதுடன் பெயர் நீக்கம், பெயர் திருத்தம், இடம் மாறுதல் போன்றவற்றையும் செய்து கொள்ள இம்மாதம் 24 ஆம் தேதி அதாவது இன்று வரை அலுவலக நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று விண்ணப்பம் அளிக்கலாம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வேலைக்கு செல்பவர்கள் வசதிக்காக கடந்த மாதம் 20 ஆம் தேதியும், இம்மாதம் 4 ஆம் தேதி மற்றும் 11 ஆம் தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் உள்ள 65 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்தச் சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொண்டனர்.

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய இதுவரை மொத்தம் 21 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இதில் 16 லட்சம் பேர் புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பம் செய்தவர்கள் ஆவார்கள். 3 ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் மட்டும் சுமார் 15 லட்சம் பேர் கலந்துகொண்டு விண்ணப்பித்துள்ளனர்.

இந்த நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் நீக்குவதற்கான காலக்கெடு இன்று மாலையுடன் முடிவடைகிறது. ஆனால், இன்று மொஹரம் திருநாளையெட்டி அரசு விடுமுறை என்பதால், வாக்குச்சாவடி மையங்களுக்குப் பொதுமக்கள் சென்று விண்ணப்பம் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ஆன் லைன் மூலம் இன்று மாலை 5 மணி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று தேர்தல் அதிகாரி ஒருவர் கூறினார்.

இனி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் நீக்கம், திருத்தம் செய்ய விண்ணப்பம் செய்துள்ள சுமார் 21 லட்சம் பேரின் வீடுகளுக்கு தேர்தல் அலுவலக ஊழியர்கள் நேரில் சென்று கள ஆய்வில் ஈடுபடுவார்கள். இந்தப் பணிகள் முடிந்தவுடன் புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தொடங்கும். புதிய வாக்காளர் பட்டியல் வருகிற ஜனவரி 11 ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது.

புதிய வாக்காளர்களுக்கு ஜனவரி 25 ஆம் தேதி, தேசிய வாக்காளர் தினத்தையொட்டி புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் வருகிற ஜனவரி மாதம் வெளியிடப்படும் புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.