Show all

முற்றுகையிட்ட மக்கள்! ஐந்து மடங்கு அள்ளிக் கொடுத்த பணஇயந்திரம்

07,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே உள்ள விஜய் நகர் பகுதியில் இருக்கும் ஆக்சிஸ் வங்கி பண்இயந்திரத்தில் நேற்று ஒருவர் 1000 ரூபாய் எடுக்க சென்று இயந்திரத்தில் ஆயிரத்தை பதிவு செய்துள்ளார். ஆனால், அவருக்கு ஐந்து மடங்கு அதிகமாக 5 ஆயிரம் ரூபாய் கிடைத்துள்ளது. சிறிது அதிர்ச்சியடைந்தாலும் அவர் தனது நண்பர்களுக்கு இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து, அப்பகுதியில் இந்தச் செய்தி பரவ அனைவரும் பணஅட்டையுடன் பணஇயந்திரத்தை முற்றுகையிட்டனர். ஆயிரம் கேட்டவருக்கு 5 ஆயிரம், 4 ஆயிரம் கேட்டவருக்கு 20 ஆயிரம் என ஐந்து மடங்கு அதிகமாக பணத்தை அள்ளி கொடுத்துள்ளது இயந்திரம்.

தகவல் அறிந்து காவல்துறை அங்கு வருவதற்குள்ளாக இயந்திரத்தில் இருந்த 2 லட்சம் ரூபாயும் காலியாகியுள்ளது. இதனை அடுத்து அங்கு வந்த வங்கி அதிகாரிகள் பணஇயந்திர அறையை பூட்டினர். மென்பொருள் கோளாறு காரணமாக இந்த தவறு நடந்துள்ளது. கண்காணிப்பு படக்கருவி மற்றும் பயன்படுத்தப்பட்ட பணஅட்டை தகவல்களை அடிப்படையாக கொண்டு யார் பணம் எடுத்துள்ளனர் என்ற விபரங்களை சேகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஓடியோடி பணம் எடுத்தவர்களுக்கு அற்ப மகிழ்ச்சிதாம். ஒருவர் விடாமல் அனைவரிடமும் இழந்த பணத்தை மீட்டு விடும் வங்கி.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,825.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.