05,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கசியும் ஆதார் அடையாள எண் தகவல்களால், தேர்தல் முடிவை மாற்றியமைக்க முடியும் சூழல் உள்ளதாக, உச்ச அறங்கூற்றுமன்றம் கவலை தெரிவித்துள்ளது. ஆதார் அடையாள எண்ணை, அரசு திட்டங்களுக்கு பயன்படுத்துவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, உச்ச அறங்கூற்று மன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச அறங்கூற்று மன்ற அறங்கூற்றுவர், தீபக் மிஸ்ரா தலைமையில், அறங்கூற்றுவர்கள், சந்திரசூட், ஏ.கே.சிக்ரி, ஏ.எம்.கன்வில்கர் அடங்கிய அமர்வு முன், ஆதார் அடையாள அட்டை ஆணையம் சார்பில், மூத்த வழக்கறிஞர், ராகேஷ் திவேதி அணியமானார். அவர் கூறுகையில், 'தொழில்நுட்பம், அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. தொழில்நுட்ப மாற்றங்களை, நம்மால் ஓரளவுக்குத்தான் புரிந்து கொள்ள முடியும், என்றார். அப்போது, அறங்கூற்றுவர் சந்திரசூட் கூறியதாவது: கசியும் வாய்ப்புள்ள ஆதார் தகவல்களால், தேர்தலின் முடிவை மாற்றி அமைக்கும் வாய்ப்பு இருப்பது கவலை அளிக்கிறது. தேர்தல் முடிவை மாற்றும் வகையில், ஆதார் தகவல்கள் பயன்படுத்தப்பட்டால், நாட்டில் மக்களாட்சி தழைக்க முடியுமா? இது நடந்துள்ளதை நாங்கள் பார்த்துள்ளோம். ஆதார் தகவல்களை பாதுகாக்க நம்மிடம் உள்ள கருவி என்ன? இதில் உள்ள பிரச்னைகள், அறிகுறியாக தென்படுவதல்ல மாறாக, உண்மையானவை. இவ்வாறு அறங்கூற்றுவர் கூறினார். அப்புறம் எதற்கு தனிமனித அடையாளத்தைச் சிதைக்கும் ஆதார். மக்களாட்சித் தத்துவத்தை சிதைக்கும் வாக்கு பதிவு எந்திரங்கள் ஆதாரும், வாக்குப் பதிவு எந்திரங்களும், பாதுகாப்பாவையாக உறுதிபடுத்தப் பட முடியாத வரை அதன் பயன்பாட்டை புறந்தள்ளாமல் இருக்கும் நிலை, மக்களாட்சித் தத்துவத்தை புற்று நோயாக அரித்துக் கொண்டிருக்கும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,761.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.