Show all

இலங்கை வந்த தமிழிசை! பாஜக விடுத்த அதிரடி தடையுத்தரவு

தனிப்பட்ட வரவாக அண்மையில் இலங்கை வந்திருந்த பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பகுதிக்கு செல்வதற்கு திட்டமிட்டிருந்தார்.

     எனினும், பாஜகவின் மேலிடத்திலிருந்து விடுக்கப்பட்ட அதிரடி தடையுத்தரவை அடுத்து அந்தப் பயணத்தை கைவிட்டு கொழும்பு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

     தனிப்பட்ட வரவாக இலங்கை வந்திருந்த பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்களைச் சந்தித்து பேசியிருந்தார்.

     இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பகுதிக்கு செல்லவிருப்பதாக கூறியிருந்தார்.

     எனினும், முள்ளிவாய்க்கால் பயணத்தை தமிழிசை சௌந்தரராஜன் திடீரென கைவிட்ட நிலையில், அவர் அவசரமாக கொழும்பு திரும்பியிருந்தார்.

     பாஜக மேலிடம் விடுத்த அதிரடி தடை உத்தரவின் காரணமாகவே தமிழிசை சௌந்தர்ராஜன் முள்ளிவாய்க்கால் பயணத்தை இடைநிறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

     இதேவேளை, கொழும்பு திரும்பிய வழியில் கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்பாக, தமிழிசை சௌந்தரராஜன் வாகனத்தில் இருந்து இறங்கி வந்திருந்தார்.

     எனினும், குறித்த கோயிலுக்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களைச் சந்திக்காமல், வீதியில் நின்றபடியே படம் பிடித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

     இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க வேண்டாம் என்று மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளதாக, தமிழிசை சௌந்தரராஜன் கூறி விட்டுச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

     அரசியல் என்பது பொதுப்பணிதானே தமிழிசை! உங்கள் இனமானத்திற்கு இழுக்;;கு என்றால் துணிச்சலாக வெளியே வந்தால் உங்களை தமிழ் மக்கள் கைவிடுவார்களா? என்ன?

     சத்தியராஜ் வாழ்மானம் தரும் தொழிலுக்கு மேலாக இன உணர்வை மதிக்கிறாரே!

     உங்கள் அப்பா, நெடுமாறனுடன் ஈழதமிழர்களுக்காக தோணி ஏறி ஈழம் செல்லும் போராட்டத்தில் ஈடுபட்டவர் ஆயிற்றே; நடுவண் அரசுக்கு எதிராக பணவிடைத்தாள் பைந்தமிழில் தருக என்று போராடியவர் ஆயிற்றே. அரசியலுக்கு மேலாக இன உணர்வை மதிக்க உங்களுக்கு என்ன தடை!

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.