ஏழை எளிய மாணவர்கள் உயர் கல்வி பெற வேண்டும் என்பதற்காக வங்கிகளில் கல்விக்கடன் அளிக்கப்படுகிறது. மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற் படிப்புகளுக்கு ரூ. 10 லட்சம் வரை சொத்து ஆவணங்கள் எதுவும் இல்லாமல் கடன் வழங்க வேண்டும். இந்த கல்விக் கடன்களுக்கு 12.4 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மட்டுமின்றி தனியார் வங்கிகளும் கல்விக்கடன் கட்டாயம் வழங்க வேண்டும். உயர் கல்விக்காக பெறப்பட்ட கடன்களை படிப்பு காலம் முடிந்த பிறகு ஒரு வருடம் கழித்து திருப்பி செலுத்த வேண்டும். இந்த அடிப்படையில் வங்கிகள்; கல்விக் கடன்களை வழங்கி வசூலிக்க வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளன. இந்த நிலையில் 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை கல்விக்கடன் பெற்றவர்களின் வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன்படி நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் வாங்கப்பட்ட கல்விக்கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி 2009-ம் முதல் 2014 வரை வங்கிகள் வழங்கிய கல்விக் கடன் வட்டி தள்ளுபடி செய்ய வங்கிகள் முன் வந்துள்ளன. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மட்டுமே தள்ளுபடி செய்ய அதற்கான விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து கொடுக்குமாறு மாணவர்களின் பெற்றோருக்கு அழைப்பு கொடுத்துள்ளது. ஆண்டு வருமானம் ரூ. 4.5 லட்சத்திற்கு கீழே உள்ளவர்கள் வருமானச் சான்றிதழை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் அத்துடன் தள்ளுபடிக்கான கோரிக்கை மனு ஒன்றும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் பொறியியல்;, மருத்துவ கல்லூரிகளில் படித்து வந்த மாணவர்கள் தங்கள் வட்டி சுமையில் இருந்து விடுபடுகின்றனர். இந்த மாத இறுதிக்குள் கடன் பெற்ற வங்கிகளில் மாணவர்கள் இதனைச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற காலக்கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வட்டி தள்ளுபடி தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு மட்டும் தான் தனியார் வங்கிகளுக்கு பொருந்தாது என்று தனியார் வங்கிகள் மறுத்து வருகின்றன. கல்விக்கடன், வட்டி விகிதம் இதற்கான விதிமுறைகள் பொதுவாக இருக்கும் போது வட்டி தள்ளுபடி செய்வது குறித்து தங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. தனியார் வங்கிகள் கூறி வருகின்றன. ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து வங்கிகளுக்கும் ஒரே சட்டம் விதிமுறைகள் தானே. இதில் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகளுக்கு என்று தனியாக சட்டங்கள் உள்ளனவா. இதனால் பாதிக்கப்பட்ட மாணவ - மாணவிகள் கேள்வி எழுப்புகின்றனர். பொறியியல் படிக்க வேண்டும் கனவில் படித்து முடித்தோம். ஆனால் அதற்கான வேலை கிடைக்காமல் இன்னும் வேலை தேடி அலைந்து திரிந்து கொண்டிருக்கிறோம். வங்கியில் வாங்கிய கல்வி கடனுக்காக பல வழிகளில் நெருக்கடி கொடுக்கிறார்கள். பணத்தை கட்டவில்லை என்றால் ஜப்தி செய்வோம் என மிரட்டுகிறார்கள். எங்கள் பெற்றோர்கள் நகை அடமான கடனுக்காக சென்றால் கூட அந்த பணத்தை கல்வி கடனுக்காக பிடித்தம் செய்கிறார்கள். சாதாரண குடும்பத்தை சேர்ந்த எங்களைப் போன்ற எத்தனையோ பேர் தனியார் வங்கி அதிகாரிகளின் மிரட்டலுக்கு பயந்து பணத்தை கட்டுகின்றனர். வட்டியும் அதிகம் வசூலிக்கிறார்கள். தேசிய வங்கிகளில் கடன் வாங்கிய மாணவர்களுக்கு ஒரு விதி? எங்களுக்கு ஒரு விதியா? சட்ட விதிகள் என்றால் எல்லோருக்கும் சமம். எனவே தனியார் வங்கிகளும் வட்டியை தள்ளுபடி செய்ய உத்தரவிட வேண்டும் என்று கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.