Show all

ஆட்சி நிர்வாகம் பற்றிய விமர்சனங்கள் தனிநபர் மீதான அவதூறு அல்ல: உச்ச நீதிமன்றம்

தமிழக அரசு தொடுத்துள்ள அவதூறு வழக்குகளில் இருந்து பாதுகாப்பு கோரி மனுக்கள் கொட்டப்பட்டுவது குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தன் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கை எதிர்த்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை நேற்று (திங்கள்கிழமை) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பிரபுல்ல சி.பன்ட் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆட்சி நிர்வாகம் பற்றிய விமர்சனங்களை தனிநபர் மீதான அவதூறாக எடுத்துக் கொள்வதை நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் பொதுக்கூட்டம் ஒன்றில் தேமுதிக தலைவர் பேசியபோது அவதூறு செய்ததாக விஜயகாந்த் மீது தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது.

இதனை எதிர்த்து விஜயகாந்த் சார்பாக செய்யப்பட்டிருந்த மனு விசாரணையின் போது நீதிபதி மிஸ்ரா கூறும்போது,

இது போன்ற வழக்குகள் இந்த மாநிலத்திலிருந்து அதிகம் வருகின்றன... ஏன்?

இந்தக் கருத்துகள் ஆட்சி நிர்வாகம் பற்றிய கொள்கையின் மீதான விமர்சனங்கள். இதில் தனிநபருக்கு எதிராக எதுவும் இல்லை. பிறகு ஏன் இந்த குற்ற அவதூறு வழக்கு?

என்று கேள்வி எழுப்பினார்.

இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 499 மற்றும் 500-ம் பிரிவுகள் விமர்சனங்களுக்கு எதிராக பயன்படுத்துவதற்காக அல்ல என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

உச்ச நீதிமன்றம் முன்வைத்த கேள்விகளுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், விஜயகாந்த் மீதான வழக்கு விசாரணைக்கு வழங்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை வரும் ஜனவரி 2-ம் தேதி வரை நீட்டித்தும் அவர்கள் உத்தரவிட்டனர்.

இதனிடையே, உச்ச நீதிமன்ற விசாரணையின்போது விஜயகாந்த் தரப்பில், மக்களின் வரிப்பணத்தை இது போன்ற வழக்குகளில் தமிழக அரசு வீணடிக்கிறது, அத்துடன், எதிர்க்கட்சிகளை செயல்படவிடாமல் முடக்கும் நோக்கத்திலேயே, தமிழக அரசு இதுபோன்ற அவதூறு வழக்குகளை அதிக எண்ணிக்கையில் தொடுக்கிறது என்று குற்றம்;சாட்டப்பட்டது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.