Show all

பேரறிவாளன் மனு: மீண்டும் விளக்கமாக நேரடியாக பதில் தர நடுவண் அரசுக்கு உச்சஅறங்கூற்றுமன்றம் ஆணை

26,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: இராஜிவ் கொலைவழக்கில், நடுவண் புலனாய்வு துறை அதிகாரி தியாகராஜன் ஒரு பிராமாண பத்திரம் பதிகை செய்திருந்தார்.

பேரறிவாளனிடம் அவர் விசாரிக்கும்போது, தாணு பயன்படுத்திய பெல்ட் வெடிகுண்டுக்கு தான் இரண்டு மின்கலம் வழங்கியதாக பேரறிவாளன் கூறியிருந்தார்.

ஆனால், அந்த மின்கலத்தை வழங்கியபோது, அவற்றை என்ன காரணத்திற்காக, என்ன நோக்கத்திற்காக வழங்கினேன் என்று தனக்கு தெரியாது என்று பேரறிவாளன் தெரிவித்திருந்தாக தியாகராஜன் கூறியிருக்கிறார்.

ஆனால், பேரறிவாளன் மீது விதிக்கப்பட்டிருக்கும் தலையாயக் குற்றச்சாட்டு சதித்திட்டம் தீட்டியது என்பதாகும்.

முன்னாள் இந்திய தலைமை அமைச்சர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், அந்த வெடிகுண்டு தயாரிக்கும் சதித்திட்டத்தில் அவர் உடந்தையாக இருந்தார் என்பதே பேரறிவாளன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு.

மின்கலங்கள் எந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் என்பது பற்றிய காரணம் தெரியாமல் வழங்கப்பட்டுள்ளதால், இந்த சதித்திட்டத்தில் அவருக்கு பங்கிருக்க வாய்ப்பில்லை.

விசாரணை அதிகாரியாக இருந்தபோது, இதனை பற்றி விளக்கமாக அறங்கூற்றுமன்றத்திடம் நான் தெரிவிக்கவில்லை என்று திரு. தியாகராஜன் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்திருந்தார்.

‘தியாகராஜன் வழங்கிய பிரமாண பத்திரம் மிக தலையாய ஆவணம். இதனால் என்னுடைய தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும். எனக்கு இடைக்கால பிணை வழங்க வேண்டும் என்று பேரறிவாளன் மனு செய்திருந்தார்.

இந்த கோரிக்கை தொடர்பாக நடுவண் புலனாய்வு துறை பதில் அளிக்க வேண்டும் என்று கடந்த விசாரணயின்போது உச்ச அறங்கூற்றுமன்றம் தெரிவித்திருந்தது.

இன்று செவ்வாய்கிழமை நடுவண் புலனாய்வு துறைக்குப் பதிலாக நடுவண் அரசு ஒரு பிரமாணப் பத்திரத்தை பதிகை செய்தது.

‘இந்தச் சதித்திட்டத்தில் யார் யாருக்கு தொடர்பு என்பது பற்றி விசாரிக்க குழு ஒன்று அமைத்திருந்தோம். இந்த விசாரணை முடிவு எதுவும் இல்லாமல் நீண்டு கொண்டே சென்றதால், மேற்கொண்டு விசாரிக்கவில்லை. இதற்கு மேலும் விசாரிக்க வேண்டியதும் இல்லை என்று இந்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு இதனை விசாரித்தபோது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஈடுபட்டோருக்கு எந்தவித கருணையும் அளிக்கக்கூடாது என்று தெளிவாக சொல்லியிருக்கிறது.

மேலும், தமிழக அரசுக்கு இவர்களின் தண்டனை காலத்தை குறைப்பதற்கு அதிகாரம் உள்ளதா என்பதை முடிவு செய்ய 3 அறங்கூற்றுவர்கள் குழு விசாரிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்

என்றும் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜிவ் காந்தி கொலையில் தண்டிக்கப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி மனு செய்த அற்புதத்தம்மாள்:

இந்த 3 அறங்கூற்றுவர்கள் குழு விசாரணை நிலுவையில் இருக்கின்றபோது, இவரை விடுதலை செய்வதற்கு எந்தவொரு அனுமதியும் அளிக்கக்கூடாது. அறங்கூற்றுமன்றம் இந்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்று நடுவண் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது இது தொடர்பாக கருத்து தெரிவித்த அறங்கூற்றுவர், ‘இது மேலெழுந்தவாரியான ஒரு வாதமாக இருக்கிறது. ஆனால், நடுவண் புலனாய்வு துறை அதிகாரி தியாகராஜனின் பிரமாணப் பத்திரத்திற்கு நீங்கள் சரியாக பதில் சொல்லவில்லை.

தியாகராஜன் அளித்த பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றதா இல்லையா? சதித் திட்டத்தில் பேரறிவாளனுக்கு பங்கு இருக்கிறதா இல்லையா? என்பதை நீங்கள் தெளிவாக சொல்லவில்லை.

எனவே, இது பற்றிய விளக்கத்தை பிரமாணப் பத்திரமாக இல்லாமல், பதில் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும். நடுவண் புலனாய்வு துறையும், நடுவண் அரசும் இதற்கு பதில் மனு பதிகை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார் என்றார்கள்.

சென்ற முறை நடைபெற்ற விசாரணையில், நடுவண் புலனாய்வு துறை மூடிய உறையில் வைத்து தங்களுடைய அறிக்கையை அளித்திருந்தது.

எனவே, அந்த அறிக்கையின் நகலை வழங்க வேண்டும் என்று பேரறிவாளன் தரப்பு வேண்டுகோள் வைத்தது.

ஆனால், அறிக்கை நகலை வழங்க முடியாது. ஆனால், அறங்கூற்றுமன்றத்திலேயே அந்த அறிக்கையை பரிசீலனை செய்யலாம் என்று அறங்கூற்றுமன்றம் கூறிவிட்டது.

எனவே, அறங்கூற்றுமன்றத்திலேயே இந்த மூடிய உறையில் இருந்த அறிக்கையை வாசித்தனர்.

இந்த வழக்கில் மேற்கொண்டு விசாரணை தேவையில்லை. இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதான நிலைப்பாட்டை நடுவண் புலனாய்வு துறை அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது.

ஆனால், அதனை உச்ச அறங்கூற்றுமன்றம் ஏற்கவில்லை. ‘நடுவண் புலனாய்வு துறை அதிகாரி தியாகராஜனின் பிரமாணப் பத்திரத்திற்கு உட்பட்டு உங்களுடைய பதில் மனு அமைய வேண்டும்.

இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணையாக 11,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119 அன்றைக்கு (24.01.2018) ஒத்தி வைக்கிறோம் என்று அறங்கூற்றுவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனால், பேரறிவாளனுக்கு தண்டனையை நிறுத்தி வைப்பதோ அல்லது பிணை அளிப்பதோ இப்போது தேவையில்லை என்று அறங்கூற்றுவர்கள் கூறிவிட்டனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,634

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.