Show all

குடியரசுத் தலைவருக்கு அறச்சீற்றமடல்! விடுதலையோ, பிணையோ மறுக்கப்பட்ட ஸ்டேன் சுவாமி மருத்துவமனையில் இறப்பு

பழங்குடி இன மக்களின் உரிமைப் போராளியும் பாதிரியாருமான ஸ்டேன் சுவாமி இறப்பு தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு திமுக, காங்கிரஸ், உள்ளிட்ட பத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இணைந்து அறச்சீற்றமடல் எழுதியுள்ளனர்.

22,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: பழங்குடி இன மக்களின் உரிமைப் போராளியும் பாதிரியாருமான ஸ்டேன் சுவாமி இறப்பு தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு திமுக, காங்கிரஸ், உள்ளிட்ட பத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இணைந்து மடல் எழுதியுள்ளனர்.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் தேவகவுடா, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், இடதுசாரிகள் தலைவர் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் இம்மடலில் கையொப்பம் இட்டுள்ளனர்.

அம்மடலில் ‘பாதிரியார் ஸ்டேன் சுவாமியின் மறைவை ஒட்டி, இந்திய ஒன்றியத்தின் எதிர்க்கட்சியினரான நாங்கள் அனைவரும் இணைந்து மிகுந்த மனவேதனையுடன், ஆழ்ந்த வருத்தத்துடன் அதேவேளையில் அறச்சீற்றத்துடனும் இந்த மடலைத் தங்களுக்கு எழுதுகிறோம்.

பாதிரியார் ஸ்டேன் சுவாமி மீது போலியான வழக்குகளைத் தொடர்ந்து அவரைத் தொடர்ந்து சிறையில் அடைத்து மனிதத்தன்மையற்ற நடவடிக்கைகளால் அவரை வருத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு குடியரசுத் தலைவராகிய தங்களை வேண்டுகிறோம்.

ஸ்டேன் சுவாமியின் இறப்பிற்கு அவர்கள்தான் பொறுப்பு. ஸ்டேன் சுவாமியின் மரணம், பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட பலரும் அரசியல் உள்நோக்கத்துடனேயே கைதானவர்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. உபா எனப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் என்ற அடக்குமுறைச் சட்டத்தின் கீழ் அவர்கள் அனைவரின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரையும் விடுவிக்குமாறு வேண்டுகிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டேன் சுவாமிக்கு திருச்சி சொந்த ஊராகும். இவர் பழங்குடியினரின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவந்தார். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பழங்குடியினரின் உரிமைகளுக்காகப் போராடி வந்தார். இந்நிலையில்தான் இவரை ஒன்றியப் புலனாய்வு மையம் கைது செய்தது.

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகேயுள்ள பீமா கோரேகன் பகுதியில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருசமூகத்தினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டு வன்முறை நிகழ்ந்த்து.

இந்த வழக்கை ஒன்றியப் புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. கடந்த 23,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122 அன்று (09.10.2020) ஒன்றியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் ஸ்டேன் சுவாமியைக் கைது செய்தனர்.

ஸ்டேன் சுவாமிக்கு தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டுகளுடன் தொடர்பிருப்பது விசாரணையில் தெரியவந்தததாகவும் இந்த அமைப்புடன் சேர்ந்து இவர் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தார் என்றும் ஒன்றியப் புலனாய்வு முகாமை அவர் மீது குற்றஞ்சாட்டியது. தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார்.

ஏற்கெனவே பார்க்கின்சன்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு சிறையில் சரியான சிகிச்சை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்று அவரது தரப்பில் தொடர்ந்து குற்றஞ்சாட்டுப்பட்டு வந்தது. கடைசியாக அவர் பதிகை செய்த இடைக்கால பிணை மனுவில் கூட ‘என்னை மருத்துவமனையில் சேர்ப்பதால் எந்த பலனும் இருக்காது. என்னால் சரியாக சாப்பிட முடியவில்லை. நான் இந்தச் சிறையிலேயே இறந்துவிடுகிறேன் என்னை மருத்துவமனையில் சேர்க்காதீர்கள். முடிந்தால் எனக்கு இடைக்கால பிணை வழங்குங்கள்’ என்று நெகிழ்ச்சி பொங்கக் கூறியிருந்தார். இதனையடுத்து, ஸ்டேன் சுவாமிக்கு உரிய மருத்துவச் சிகிச்சை வழங்க வேண்டும் என்று ஒன்றிய மனித உரிமைகள் ஆணையமும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், பார்க்கின்சன்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கெரோனா தொற்றும் உறுதியானது. முந்தாநாள் அவருக்கு செயற்கை மூச்சுக் கருவி சிகிச்சையை மருத்துவர்கள் தொடங்கினர். நேற்று அதிகாலை 4.30 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகலில் அவர் உயிரிழந்தார்

அவரது இடைக்கால பிணை மனு மீதான விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே அவரது மறைவுச் செய்தி மும்பை உயர் அறங்கூற்றுமன்றத்துக்கு தெரிவிக்கப்பட்டது. அவரது மறைவுக்குப் பலரும் தொடர்ந்து இரங்கல் தெரிவித்துவருகின்றனர். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.