Show all

சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்துவதால் மாநிலங்கள் வரி விதிக்கும் அதிகாரத்தை இழக்கும்

ஜூலை 1ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு அமலுக்கு வருகிறது!

     நடுவண் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகந்த தாஸ், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களும் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பை அமல்படுத்த ஒப்புக் கொண்டுள்ளன. இதையடுத்து, ஜூலை 1ம் தேதி முதல் இந்த வரி விதிப்பு அமலுக்குக் கொண்டுவரப்பட உள்ளதாக, ஷக்திகந்த தாஸ் குறிப்பிட்டுள்ளார்.

     டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த சக்திகந்த தாஸ் இதுபற்றி மேலும் கூறியதாவது:

     சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பை அமல்படுத்துவது தொடர்பாக, கடந்த பிப்ரவரி 18ம் தேதி சரக்கு மற்றும் சேவை வரிக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில், அனைத்து மாநிலங்களுக்கும் உள்ள கருத்து வேறுபாடுகள், சந்தேகங்கள் விரிவாக, விவாதிக்கப்பட்டு, நிவர்த்தி செய்யப்பட்டன.

     ஒருசிலர் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு தற்போதைக்கு சாத்தியம் இல்லை என கருத்து தெரிவித்தனர். ஆனால், சூலை 1 முதல், அதனை அமல்படுத்த முடிவு செய்துள்ளோம். ஏப்ரல் 1ம் தேதியே அமல்படுத்த இலக்கு நிர்ணயித்தபோதிலும், சில தவிர்க்க முடியாத காரணங்களாலேயே, இந்த முடிவு தற்போது சற்று காலம் தள்ளி செயல்படுத்தப்படுகிறது.

     சூலை 1ம் தேதி என்ற இலக்கில் இருந்து பின்வாங்கப் போவதில்லை. சரக்கு மற்றும் சேவை வரி விதிப்புக்கான அனைத்துப் பணிகளும் அதற்கேற்ப தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன்மூலமாக, நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவைப் பணிகள் தொடர்பாக, ஒரே வரி விதிப்பு நடைமுறைக்கு வர உள்ளது. நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் தீவிர முயற்சிக்குப் பலன் கிடைக்கும்.

இவ்வாறு ஷக்திகந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

சரக்கு மற்றும் சேவை வரி என்றால் என்ன?

     பல ஆண்டு அரசியல் இழுபறிக்குப் பின் ஆகஸ்ட்3, 2016 அன்று நடுவண் மாநில அரசுகள்,

‘சரக்கு மற்றும் சேவை வரி’ என்ற புதிய வரியை விதிக்க அதிகாரம் அளிக்கும் அரசியல் சட்ட திருத்தத்தை இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை ஏற்றுக்கொண்டது.

இந்தச் சட்டத் திருத்தம் ஏற்கெனவே மக்களவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக வேறு பல நிகழ்வுகளுக்குப் பிறகு சூலை 1ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி என்ற புதிய வரி இந்தியாவில் அமலுக்கு வரும். வேறு பல வரிகள் காணாமல் போகும்.

ஏன் இந்த சரக்கு மற்றும் சேவை வரி?

ஏன் இவ்வளவு சர்ச்சை?

இந்தியாவில் இதுவரை நடுவண், மாநில அரசுகள் பொருட்கள் மேல் பல வரிகளை விதிக்கின்றன.

அவை,

(1) பொருள் உற்பத்தி மீது நடுவண் அரசு விதிக்கும் கலால் வரி.

(2) பொருள் விற்பனை மீது மாநிலங்கள் விதிக்கும் விற்பனை வரி.

(3) மாநிலங்களுக்கிடையே விற்பனை நடைபெறும்போது எந்த மாநிலத்தில் விற்பனை ஏற்படுகிறதோ அம்மாநிலத்தால் நடுவண் விற்பனை வரி விதிக்கப்படும்.

(4) சேவைகள் மீது நடுவண் அரசு சேவை வரி விதிக்கிறது.

(5) சினிமா போன்ற பொழுபோக்கு வியாபாரத்தின் மீது கேளிக்கை வரி மாநிலங்களால் விதிக்கப்படும.

(6) ஒரு மாநிலம் அல்லது ஒரு உள்ளாட்சி தங்கள் பகுதிக்குள் வரும் பொருட்கள் மீது நுழைவு வரி, அல்லது ஆக்ட்ராய் உள்ளது.

(6) மாநிலங்கள் விதிக்கும் வாகன வரி, என பல வரிகள் பொருட்கள் சேவைகள் மீது உள்ளன. இவை அனைத்தையும் நீக்கிவிட்டு அனைத்துப் பொருட்கள், சேவைகள் மீது (பெட்ரோல், மது வகைகள் நீங்கலாக) ஒரே வரி நடைமுறைக்கு வரவிருக்கிறது.

புதிய வரியால் நுகர்வோருக்கு என்ன நன்மை?

இப்பொது நடுவண், மாநில அரசுகள் தனித்தனியே பொருட்கள் மீது வரி விதிக்கின்றன. ஒரு பொருள் உற்பத்தி செலவு ரூ100 அதன் மீது 16விழுக்காடு கலால் வரியை நடுவண் அரசு வசூலிக்கிறது. அதாவது ரூ16. அதன் பிறகு ரூ116 என்ற விற்பனை விலை மீது 12 விழுக்;காடு (ரூ 13.92) விற்பனை வரி வசூலிக்கிறது. ஆக, பொருளின் மொத்த விலை ரூ 129.92 ஆகும். இதில் மாநிலங்கள் வசூலிக்கும் விற்பனை வரி மட்டுமே விற்பனை ரசீதில் உள்ளதால், அந்த வரி மட்டுமே நுகர்வோருக்கு தெரிகிறது. இந்த இரு வரிகளையும் இணைத்து சரக்கு மற்றும் சேவை வரி என்ற ஒரே வரி 20விழுக்காடு என்று இருந்தால் பொருளின் விலை ரூ 120 என்று தான் இருக்கும். எனவே, பல பொருட்களின் விலைகள் குறைய வாய்ப்பு உண்டு. ஆனால், இதுவரை 14விழுக்காடாக உள்ள சேவை வரி, இனிமேல சரக்கு மற்றும் சேவை வரியில் 20 விழுக்காடாக உயரும்போது சேவைகளின் விலை உயரும். உதாரணமாக தொலைபேசிக் கட்டணம்.

தமிழ்நாடு எதிர்ப்பது ஏன்?

இதுவரை தமிழகத்தில் உற்பத்தி செய்து வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படும் பொருட்கள் மீது 2 விழுக்காடு விற்பனை வரியை தமிழக அரசு வசூலிக்கிறது. இதனால் மட்டுமே ரூ 3 ஆயிரம் கோடி வருவாய் வருகிறது. சரக்கு மற்றும் சேவை வரி வந்தால், இந்த வருவாய் இழப்பு ஏற்படும். வேறு பல வரிகளையும் தமிழகம் இழக்கும், எனவே, சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் வரி வருவாய் இழப்பு ஏற்படும் என்பது தமிழக அரசின் கணக்கு. இதனை நடுவண் அரசு முழுமையாக தரவேண்டும் என்று தமிழகம் கேட்கிறது. மேலும் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்துவதால் மாநிலங்கள் தாங்கள் வரி விதிக்கும் அதிகாரத்தை இழப்பதையும் தமிழகம் எதிர்க்கிறது.

என்ன சொல்கிறது நடுவண் அரசு?

     இப்போது நிறைவேற்றப்பட்ட அரசியல் சட்ட திருத்தத்தில் ஒரு மாநிலத்திற்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பை ஐந்து ஆண்டுகள் வரை நடுவண் அரசு ஈடு செய்வதாகக் கூறுகிறது. ஆனால், இதனை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாக குறைக்க சட்டம் இயற்ற நடுவண் அரசுக்கு உரிமை உள்ளது என்பதை இந்த சட்ட திருத்தம் கூறுகிறது. மேலும் ஆட்சி மாறும் போது எதுவும் நிகழலாம். இது தமிழகத்திற்கு ஏற்புடையதாக இல்லை. இருப்பினும், இப்போது இந்த சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுள்ளதால், அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி சிந்திக்க வேண்டும்.

     இந்த அரசியல் சட்ட திருத்த மசோதா மீண்டும் மக்களவையில் நிறைவேற்றப்படும். பிறகு குறைந்தபட்சம் 50 விழுக்காடு மாநிலங்கள் தங்கள் சட்டப்பேரவையில் இந்தத் திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும். அடுத்த ஓரிரு மாதங்களில் இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில் 15 மாநிலங்கள் இந்த சட்டத் திருத்தத்தை நிறைவேற்றிவிடும் என்று நடுவண் அரசு உறுதியாக நம்புகிறது.

அதன் பிறகு சரக்கு மற்றும் சேவை வரிக் குழுவை குடியரசுத்தலைவர் உருவாக்குவார். இதில் நடுவண் நிதி அமைச்சர் தலைவராகவும், மாநில நிதியமைச்சர்கள் உறுப்பினர்களாகவும் இருப்பர். இந்த சரக்கு மற்றும் சேவை வரி;,  தொடர்பான சட்டங்கள், வரி விகிதங்கள், வரி வசூலிக்கும் நிர்வாக அமைப்பு ஆகிவற்றை முடிவு செய்து சட்ட முன்வரைவுகளை வழங்கும். இதனை நடுவண், மாநில அரசுகள் நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் சட்டங்களாக இயற்றி சரக்கு மற்றும் சேவை வரியை நடைமுறைப்படுத்துவர்.

நடுவண், மாநில அரசுகள் எப்படி இணைந்து செயல்படுத்தும்?

நாடு முழுவதும் ஒரே சரக்கு மற்றும் சேவை வரி விகிதம் இருக்கும், உதாரணமாக 20 விழுக்காடு என்று வைத்துக்கொள்வோம். இதனை இரு பகுதிகளாக பிரிப்பார்கள். ஒரு பொருள் ஒரு மாநிலத்தில் உற்பத்தி செய்து அதே மாநிலத்தில் விற்பனை செய்யப்பட்டால் அந்த 20 விழுக்காடு சரக்கு மற்றும் சேவை வரியானது நடுவண் சரக்கு மற்றும் சேவை வரி என்றும்

மாநில சரக்கு மற்றும் சேவை வரி என்றும் பிரித்து வரிகள் சமர்பிக்கப்படும். நடுவண் அரசுக்கும், மாநில அரசுக்கும் பங்குகள் செல்லும். மாறாக, ஒரு பொருள் ஒரு மாநிலத்தில் உற்பத்தி செய்து வேறு மாநிலத்தில் விற்பனை செய்யப்பட்டால், அதற்கும் 20 விழுக்காடுதான் சரக்கு மற்றும் சேவை வரி. அதில் மத்திய பங்கு மத்திய அரசுக்கு செல்லும், ஆனால், மற்றொரு பங்கு எந்த மாநிலத்திற்கு விற்பனை செய்யப்பட்டதோ அந்த மாநிலத்திற்கு செல்லவேண்டும். இதனை, பொது சரக்கு மற்றும் சேவை வரி என்ற பொது கணக்கில் வரவு வைத்து பின்பு பொருள் சென்று சேர்ந்த மாநிலத்தில் உள்ள அரசுக்கு அந்த வரி பணம் சென்று சேரும்.

சிக்கலான வரி செலுத்தும் முறையா ஜிஎஸ்டி?

இதனை எளிமைப்படுத்துவதற்காக சரக்கு மற்றும் சேவை வரி நெட்வொர்க் என்ற ஒரு நிறுவனத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டன. இந்த நிறுவனம், முழுவதும் கணினி மயமான வரி செலுத்தும் முறையை ஏற்படுத்திவிட்டது. எல்லா மாநிலங்களுக்கும் தங்கள் வரி வசூலிக்கும் நிர்வாக அலுவலகங்களை கணினிமயமாக்கவும், அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கவும் இந் நிறுவனம் உதவி செய்கிறது. பல தனியார் கணினி மென்பொருள் நிறுவனங்களும் இந்த வேலையை செய்துள்ளன.

சரக்கு மற்றும் சேவை வரியை வங்கிகளில்தான் கட்டவேண்டும், இணையதளம், வங்கி சேவையில் வரி செலுத்துவது ஊக்குவிக்கப்படும். இதற்காக மத்திய ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு தனியான பண வரிவர்த்தனை வழியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

வியாபாரிகள், சிறு வியாபாரிகள் கவலைப்படலாமா?

இதுவரை பலவித வரிகளை செலுத்திய வியாபாரிகள் இனிமேல் ஒரே சரக்கு மற்றும் சேவை வரி வரியை செலுத்தவேண்டும். இது அவர்களின் வரி செலுத்தும் செலவை குறைக்கும். ஆனால் சிறு வியாபாரிகள், கணினி மயமாக்கப்பட்ட ரசீது முறையை, வரி செலுத்தும் முறையை செயல்படுத்த சிரமப்படுவர். இதனை நீக்கும் பொருட்டு மிகச் சிறிய வியாபாரிகளை இந்த சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பிலிருந்து நீக்கவும் பேசப்படுகிறது.

     மோடி அரசு- மாநிலங்களின் அதிகாரங்களைக் குறைத்து நடுவண் அரசிடம் அதிகாரங்களைக் குவிக்கும் பல்வேறு உபாயங்களை செயல் படுத்தி வருகிறது. அந்த வகையானவைகள் தாம் இந்த

சரக்கு மற்றும் சேவை வரி,

ஆதார் சாதாரண மனிதனின் அதிகாரம்,

ஆதார் அடிப்படையில் குடும்ப அட்டை,

வங்கி கணக்கில் எரிவாயு மானியம் என்பனவெல்லாம்.

இந்தியாவில்- பாரத தேச ஹிந்து இராஜ்ஜியத்தை அமைத்திட மோடி அரசு காங்கிரசை நம்புகிறது; மாநிலக்கட்சிகள் எதையும் நம்பவில்லை; அவைகள் மதச் சார்பற்ற நாடாக இந்தியாவை ஆக்கிவிடும் என்று அஞ்சுகிறது.

இதை எந்த மாநிலக் கட்சிகளும் கண்டு பிடித்ததாகத் தெரியவில்லை.

திராவிட நாடு, மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்றெல்லாம் முழங்கிய திமுகவிற்கே புரியாத போது வேறு மாநிலக் கட்சிகளுக்கு எங்கே புரியப் போகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.