தேர்தலில் ஏற்பட்ட
தோல்வியின் காரணமாக ஏற்பட்ட வேதனையில் இருந்து மீள, சொந்த மாநிலத்தை விட்டு சிறிது
காலம் விலகியிருக்க விரும்புவதாக இரோம் ஷர்மிளா கூறியுள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் இருந்து விமானம் மூலம்
கோவை வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், மணிப்பூரில் ஆட்சியமைக்க
உள்ள பாஜக, தனது பண பலத்தாலும், அதிகாரத்தாலும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது என்பதை
மாநில மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார். இரோம் ஷர்மிளா, கேரளாவின் பாலக்காடு மாவட்டம்
அட்டப்பாடியில் உள்ள தியான மையத்தில் சில நாட்கள் தங்கியிருக்க திட்டமிட்டுள்ளார். மணிப்பூரில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த
அவர், அங்கிருந்து சாலை மார்கமாக அட்டப்பாடி சென்றுள்ளார். மணிப்பூரில் அமலில் உள்ள ஆயுதப் படை சிறப்பு அதிகாரச்
சட்டத்தை எதிர்த்து இரோம் ஷர்மிளா கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தார். தன்னுடைய கோரிக்கைக்கு அரசு செவிமடுக்காததால்
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்ட இரோம் ஷர்மிளா, புதிய
அரசியல் கட்சியைத் தொடங்கி நடந்து முடிந்த மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில் தொடர்ந்து
3 முறை முதல்வராக இருந்த இபோபி சிங்கை எதிர்த்து, தௌபால் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி
அடைந்தார். மாநில மக்களுக்காக தொடர்ந்து 16 ஆண்டு காலம் போராடிய இரோம் ஷர்மிளாவுக்கு
87 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. மொத்தத்தில் மணிப்பூர் மக்கள் வைத்த தேர்வில்
இரோம் ஷர்மிளா தோற்றுப் போய் விட்டார் என்பதே உண்மை.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.