Show all

மோடி முழக்கத்தை முதலில் நானும் நம்பினேன்! ஆனால் அவர் நாட்டை ஏமாற்றிவிட்டார்; அவர் ஒரு கெட்ட கதாபாத்திரம்: சந்திரபாபு நாயுடு

07,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கெட்ட கதாபாத்திரம்; நாட்டை ஏமாற்றிவிட்டார்; மோடி மீது சந்திரபாபு நாயுடு கடும் பாய்ச்சல்

தலைமைஅமைச்சர் மோடி கெட்ட கதாபாத்திரம் என்றும், இந்திய பொருளாதாரத்தை சீரழித்துவிட்டார் என்றும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

விசாகபட்டினத்தில் நடைபெற்ற 'இந்தியா டுடே கான்க்ளேவ் சவுத்' நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய சந்திரபாபு நாயுடு கூறியதாவது: மோடி தன்னை வலிமையானவர் என்று கூறுகிறார். ஆனால், நாட்டுக்காக அவர் என்ன செய்தார்? பொதுமக்கள் நிம்மதியாக தூங்க முடியவில்லை. புத்தம்புதிய வணிக நிறுவனம் இந்தியா மற்றும் ஸ்டேண்ட் அப் இந்தியா போன்ற திட்டங்கள், வெறும் முழக்கமாகவே உள்ளன. உண்மையில் செயல்பாட்டுக்கு வரவில்லை.

மோடியைவிட யார் வேண்டுமானாலும் சிறப்பானவராகத்தான் இருப்பார்கள். மோடி ஒரு கெட்ட கதாபாத்திரம். பொருளாதாரத்தையே நாசம் செய்துவிட்டார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி அளித்த வாக்குறுதியை நினைத்து பார்க்க வேண்டும். அதைவிடுத்து, காங்கிரஸ் அரசை குற்றம் சொல்லி வருகிறார்.

நடுவண் அமைப்புகளான குற்றப்புலனாய்வுத் துறை, அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையை, மோடி அரசு தவறாக பயன்படுத்தி வருகிறது. ஜனநாயக அமைப்புகளை மோடி அரசு மதிக்கவில்லை. ஆந்திராவிலுள்ள விசாரணை அமைப்புகள், நடுவண் புலனாய்வுத் துறையை விட சிறப்பாக செயல்படுகின்றன.

அரசியல்வாதிகளையும், தொழிலதிபர்களையும் மிரட்டுவதற்கு, விசாரணை அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. தலித்துகள், முஸ்லீம்கள் அச்சத்தில் உள்ளனர். ஊடகங்களால் அவற்றை செய்தியாக கூட சொல்ல முடியாத சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. மோடி முழக்கத்தை முதலில் நானும் நம்பினேன். ஆனால் அவர் நாட்டை ஏமாற்றிவிட்டார். இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,009.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.