Show all

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாஜக மோசடி: மாயாவதி குற்றச்சாட்டில் நியாயம் இருக்குமா

16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: உத்தரப்பிரதேசத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாஜக மோசடி செய்துள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றஞ்சாட்டியுள்ளார்.

நடந்து முடிந்த உத்தரப்பிரதேச மாநில உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடிவுகள் வௌ;ளிக்கிழமை அறிவிக்கப்பட்டன. இதில், புதிய திருப்பமாக பகுஜன் சமாஜ் கட்சி பெருவாரியான இடங்களில் வெற்றிபெற்று 2-ஆம் இடத்துக்கு முன்னேறியது. அலிகார் மற்றும் மீரட் ஆகிய 2 மாநகராட்சிகளையும் கைப்பற்றி அசத்தியது.

இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் எங்களுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தற்போது எங்களுடன் தலித்துகள் மட்டும் இல்லாமல் சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டவர்கள், பொதுப்பிரிவினர் என்று அனைத்து பிரிவினர்களும் எங்களுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

நாங்கள் உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி செய்தபோது அது அனைவருக்குமான அரசாங்கமாகத்தான் இருந்தது. அதுவே இம்முறையும் எங்களுக்கு வெற்றியை அளித்துள்ளது. இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் நாங்கள் எதிர்பார்த்தது போன்று அமையவில்லை.

இதற்கு தலையாய காரணம் ஆளும் பாஜக தான். முன்னதாக நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் போன்று இம்முறையும் அவர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்துள்ளனர்.

இருந்தாலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று அவர்கள் நினைக்காததால் அவர்கள் முயற்சி எங்களை குறி வைக்கவில்லை போலிருக்கிறது. எனவே நாங்கள் முற்றிலும் வீழ்ந்து விடவில்லை. நாங்கள் 2-ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளோம். பகுஜன் சமாஜ் கட்சியின் உறுப்பினர்களும், தொண்டர்களும் கடுமையாகப் போராடி இந்த வெற்றியை பெற்றுள்ளனர்.

நான் பாஜக-வுக்கு ஒரு சவால் விடுகிறேன். அவர்கள் உண்மையானவர்கள் என்றால், ஜனநாயக்தின் மீது நம்பிக்கை இருப்பவர்களாக இருந்தால், வருகிற தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக பழைய ஓட்டுச் சீட்டு முறையை பின்பற்ற வேண்டும்.

உண்மையிலேயே தேசம் அவர்களின் பின்னால் இருக்கிறது என்று நம்பினால் அவர்கள் இதைச் செய்து காட்ட வேண்டும். ஆனால், அவ்வாறு செய்தால் எங்கும் வெற்றிபெற முடியாது என்பது பாஜக-வுக்கு நன்கு தெரியும் என்றார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,624

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.