16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: இராதாகிருட்டினன் நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக வேட்பாளராக நடிகர் விஷால் போட்டியிடுவதற்கான அதிகாரப்பூர்வமான தகவலை தற்போது விஷால் வெளியிட்டுள்ளார். இராதாகிருட்டினன் நகரில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம், சசிகலா அணி சார்பில் சுயாட்சையாக தினகரனும் போட்டியிட வேட்பு மனு பதிகை செய்துள்ளனர். காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை திமுக வேட்பாளர் மருதுகணேஷ்க்கு ஆதரவு தெரிவித்துள்ளது. தேமுதிக, பாமக கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. இந்நிலையில், பாஜக சார்பில் கரு.நாகராஜன் போட்டியிடுவார் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் ஜெ.தீபா வேட்புமனு பதிகை செய்யப்போவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், இராதாகிருட்டினன் நகரில் நடிகர் சங்க பொதுச்செயலாளர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவரும் நடிகருமான விஷால் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலை இன்று விஷால் வெளியிட்டுள்ளார். வரும் திங்கள்கிழமை வேட்புமனுபதிகை செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல நடிகர்களான ரஜினி, கமல்ஹாசன் ஆகியோர் நேரடி அரசியலில் களமிறங்கி இருக்கும் நிலையில், அடுத்ததாக விஷாலின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகர் சங்கத் தேர்தலில் பொதுச்செயலாளர், தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் என இரண்டு பதவிகளுக்கும் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கும் விஷால், அரசியலில் வெற்றி பெற்று பேரவைக்கு செல்வாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,624
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.