நேர்மையான, வெளிப்படையான, வலுவான இந்தியாவும், இந்தியப் பொருளாதாரமும் உருவாக, மின்னணு சார்ந்த பணப் பரிவர்த்தனைகள் வழிவகுக்கும் என்பதாக, ரொக்கமற்ற பொருளாதார நடைமுறைக்கு மக்கள் மாறுவதை நடுவண் அரசு ஊக்குவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஆதார் எண்ணையும், கை ரேகையையும் பதிவு செய்து, செல்போன் வாயிலாக மின்னணு பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்வதற்காக விசேஷமான செயலியை உருவாக்கிட நடுவண் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவில் உள்ள செல்பேசி உற்பத்தி நிறுவனங்களிடம், கைரேகை மற்றும் கருவிழிப்படலத்தை பதிவு செய்யும் வகையில் செல்பேசிகளை உருவாக்கும்படி வலியுறுத்தியுள்ளது. அத்தகைய செயலி பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில், ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்திருந்தால், புதிதாக அறிமுகமாகவுள்ள செயலியை பயன்படுத்தி, பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். மேலும், பல்பொருள் அங்காடி உள்ளிட்ட பெரிய கடைகளிலும் ரொக்கமில்லா பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். கடன் மற்றும் பற்று அட்டைகளைப் பயன்படுத்தாமல், மின்னணு பரிவர்த்தனையை அதிகரிப்பதற்கான முயற்சியாகவே இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக நடுவண் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.