06,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக நடுவண் அரசும், காவிரி விவகாரத்தில் ஒட்டு மொத்தமாக கருநாடக அரசும் உச்ச அறங்கூற்று மன்றத் தீர்ப்;பை மதிக்காத நிகழ்வுகளை வரலாறு அறியும். தமிழகத்தைப் பொறுத்த வரை உச்ச அறங்கூற்று மன்றத் தீர்ப்புகளை தலைமேல் வைத்துப் போற்றுவதே வரலாற்றுப் பதிவுகளாக இருந்து வருகிறது. தமிழகத்தை அடுத்து ஆந்திர மாநில அரசும் உச்ச அறங்கூற்று மன்றத் தீர்ப்பை மதித்து ஒழுகும் நிகழ்வு ஒன்று வரலாற்றுப் பதிவாகியிருக்கிறது. ஆந்திர மாநிலத்தில் டிரைமெக்ஸ் குரூப் என்ற தனியார் நிறுவனம் சட்டவிரோத சுரங்கத் தொழிலில் ஈடுபடுவதாகவும், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியும் நடுவண் அரசின் முன்னாள் செயலாளர் இ.ஏ.எஸ்.சர்மா, உச்ச அறங்கூற்றுமனறத்தில் மனு பதிகை செய்தார். இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு நடுவண் அரசுக்கும், ஆந்திர அரசுக்கும் உச்ச அறங்கூற்று மன்றம் உத்தரவிட்டது. அதையடுத்து, அந்நிறுவனம் சுரங்கத் தொழிலை நிறுத்தி வைக்க ஆந்திர அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று அறங்கூற்றுவர்கள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தனியார் நிறுவனம் சார்பில் அணியமான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, உச்ச அறங்கூற்று மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால் பயந்து போய், தங்களது நிறுவனத்துக்கு எதிராக ஆந்திர அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறினார். அதற்கு அறங்கூற்றுவர்கள், நாங்கள் ஆளைக் கொல்லும் புலிகள் அல்ல. எங்களைப் பார்த்து மாநிலங்கள் பயப்பட வேண்டாம் என்று கூறினர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,918.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.