Show all

இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பா.ஜனதா எம்.பி. தருண் விஜய் தெரிவித்தார்.

சென்னையை அடுத்து உள்ள புழல் மற்றும் கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் உள்ள இலங்கை அகதிகள் 12 பேர் கொண்ட குழுவினர் நேற்று வெளியுறவுத்துறை பாராளுமன்ற ஆலோசனைக்குழு உறுப்பினரும், பா.ஜனதா எம்.பி.யுமான தருண் விஜயை சென்னை தியாகராயநகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சந்தித்து பேசினர்.

அப்போது அவரிடம், இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து இந்தியாவில் அகதிகளாக வாழும் தங்களுக்கு குடியுரிமை பெற்றுத்தரவேண்டும், கல்வி, வேலைவாய்ப்பில் சலுகை வழங்கவேண்டும், அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் கொடுத்தனர்.

இதையடுத்து தருண் விஜய் பேட்டியில் கூறியதாவது:

     பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நடுவண் அரசு இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளை உணர்ச்சிப்பூர்வமாக கருதி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறது. இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கவனத்துக்கு எடுத்துச்சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் உள்ள முகாம்களில் வாழும் இலங்கை அகதிகள் வலுக்கட்டாயமாக சொந்த ஊர்களுக்கு அனுப்பப்படமாட்டார்கள். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திய பின்னர் விருப்பத்தின்பேரிலேயே அனுப்பப்படுவார்கள்.

முகாம்களில் உள்ள அகதிகள் மனிதாபிமானத்துடன் நடத்தப்படவேண்டும். அதை மீறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். திருமங்கலம் அகதிகள் முகாம் சம்பவம் போன்று இனிமேல் நடக்காமல் இருக்க அதிகாரிகளை எச்சரிக்கிறேன். முகாம்களில் வசதிகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கிறேன்.

திருச்சி அகதிகள் முகாமில் உள்ள தயன்ராஜ் விவகாரத்தில், அவருடைய வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பின்னர் இலங்கைக்கும், இந்தியாவுக்கும் நல்ல உறவு இருந்து வருகிறது. 60 ஆண்டுகாலம் ஆட்சி செய்த காங்கிரஸ் இந்த விவகாரத்தில் அலட்சியமாக இருந்ததே இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம்.

பேட்டியின்போது பா.ஜனதா ஊடக பிரிவு தலைவர் ஏ.என்.எஸ். பிரசாத், இளைஞரணி பொதுச்செயலாளர் வினோஜ் பி.செல்வம், வெளியுறவு விவகார இந்திய அறக்கட்டளையின் இயக்குனர் கே.பிரபு உள்பட பலர் உடன் இருந்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.