முன்னாள் பிரதமர்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஜெயின் குழுவினால்; குற்றம்சாட்டப்பட்ட சந்திராசாமி கடைசி
வரை சிபிஐயால் விசாரிக்கப்படவேயில்லை. திருப்பெரும்புதூரில் 1991ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சந்திராசாமிக்கும் தொடர்பு இருப்பதாக
காங்கிரஸ் தொடக்கம் முதலே குற்றம்சாட்டி வந்தது. சந்திராசாமிக்கு சர்வதேச அளவிலான தீவிரவாத அமைப்புகளுடன்
தொடர்பு இருப்பதால் படுகொலையின் பின்புலமாக அவர் இருக்கக் கூடும் என்றும் இதற்கு பல்வேறு
சான்றுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. தீவிரவாத அமைப்புகளுடன் சந்திராசாமிக்கு
இருந்த இணக்கம் குறித்த ஆதாரங்களை நரசிம்மராவ் அரசு ஜெயின் குழுவிடம் அளிக்கவேயில்லை
என்றும் ஒவ்வொரு முறையும் அவர் ஜெயின் குழுவின் முன்பு விசாரணைக்கு அணியமாவதில் இருந்து
விலக்கு அளிக்கப்பட்டுக் கொண்டே இருந்ததாகவும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட நாளில் சாமியார் சந்திராசாமி
எங்கே இருந்தார், அவர் யார் யாரைத் தொடர்பு கொண்டு பேசினார் என்ற தகவல்கள் அடங்கிய
ஆவணங்கள் தொலைந்து போயுள்ளன. அதே போன்று வயர்லெஸ் போனில் அவர் அன்றைய தினம்
யார் யாரிடம் தொடர்பு கொண்டு தகவல் பரிமாற்றம் செய்தார் என்ற விவரங்களும் இல்லை என்று
ஜெயின் குழு குற்றஞ்சாட்டியது. சந்திராசாமி லண்டனில் வைத்து காலிஸ்தான் விடுதலைப்
படையைச் சார்ந்த ஜெக்ஜித்சிங் சவுகான் என்பவர் - அகாலிதளம் கட்சியைச் சார்ந்த சேவா
தாஸ் என்பவரிடம் ராஜீவ் காந்தியைக் கொல்லத் திட்டம் தீட்டியுள்ளார். இதை சேவா தாஸ்
ஜெயின் கமிஷன் முன் தெரிவித்தார். லண்டனில் உள்ள சவுகான் வீட்டில் - தீவிரவாதிகள்
பங்கு கொண்ட ஒரு கூட்டம் நடந்தது என்றும், அதில் இந்தக் கொலைத் திட்டம் பற்றி கூறப்பட்டது
என்றும் அவர் மேலும் கூறினார். இந்த நிலையில் சவுகானை அப்ரூவராக மாறும்படி வலியுறுத்தவே
சந்திராசாமியும், சுப்ரமணியசாமியும் லண்டன் சென்றார்களா என்று, குழுவினால் கேள்வி எழுப்பப்பட்டது.
ஜெயின் தனது அறிக்கையில் இதைக் குறிப்பிட்டு சுப்ரமணியசாமிக்கு எதிராக சந்தேகத்தைக்
கிளப்பியிருக்கிறார். இதன் அடிப்படையில்
சந்திராசாமியையும், சுப்ரமணிய சாமியையும் விசாரிக்க வேண்டும் என்று ஜெயின் குழு பரிந்துரைத்தது.
கடைசி வரை விசாரணை இல்லை. ராஜீவ் காந்தி கொலையை அரங்கேற்றியவர்களுக்கு நிதியுதவி
செய்ததே சந்திராசாமி தான் என்ற ஒரு சாட்சியமும் கூறப்பட்டிருந்தது. ஆனால் ஜெயின் குழு
அறிக்கை சொன்னபடி சந்திராசாமியிடம் சிபிஐ கடைசி வரை விசாரிக்காத நிலையில் இன்று மாரடைப்பு
காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். ஒரு உண்மை நிரந்தரமாக செத்துப் போனது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.