Show all

எம்ஆர்ஐ இயந்திரத்திற்குள் சிக்கி நோயாளியின் உறவினர் பலி! மும்பை மருத்துவமனையில் பயங்கரம்

16,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: மும்பையில் உள்ள பிரபல நாயர் மருத்துவமனையில் உள்ள எம்ஆர்ஐ இயந்திரத்திற்குள் சிக்கி நோயாளியின் உறவினர் பலியான செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இதுபோன்ற சம்பவம் இதற்கு முன்பு நடந்ததில்லை என்று கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பவத்தைத் தொடர்ந்து மருத்துவர் உள்பட 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்துள்ளனர். இந்தியாவில் இதற்கு முன்பு இத்தகைய சம்பவம் நடந்ததில்லை. எனவே இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலியான நபரின் பெயர் ராஜேஷ் மரு. இவர் லால்பாக் என்ற பகுதியைச் சேர்ந்தவர். சனிக்கிழமை மாலை இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. நோயாளி ஒருவருக்குத் துணையாக இவர் வந்திருந்தார். எம்.ஆர்.ஐ இயந்திரம் உள்ள அறைக்குள் இவர் வந்தபோது கையில் உயிர்வளி உருளையையும் எடுத்து வந்துள்ளதாக தெரிகிறது. அந்த உயிர்வளி உருளையோடு சேர்த்து இவர் இயந்திரத்திற்குள் இழுக்கப்பட்டு மரணத்தைச் சந்தித்துள்ளார்.

சம்பவம் நடந்த நாயர் மருத்துவமனை மும்பை மாநகராட்சியின் நிர்வாகத்தின் கீழ் வருகிறது. எம்.ஆர்.ஐ அறைக்குள் உலோகப் பொருட்களுக்கு அனுமதி இல்லை. அப்படி இருக்கும்போது எப்படி உயிர்வளி உருளை உள்ளே எடுத்து வரப்பட்டது என்பது குறித்து மாநகராட்சி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, பொறுப்பில்லாமல் பணியில் இருந்ததாக மருத்துவர் சௌரப் லஞ்ச்ரேகர், அலுவலகப் பையன் வித்தல் சவான், உதவியாளர் சுனிதா சுர்வே ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மருவின் மாமியார் தாயார் லட்சுமி இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உதவி செய்வதற்காக வந்திருந்த இடத்தில் இப்படி மரணத்தைச் சந்தித்துள்ளார் மரு.

சம்பவம் குறித்து லட்சுமியின் மகன் ஹரீஷ் கூறுகையில், நாங்கள் எம்ஆர்ஐ அறைக்குள் இருந்தபோது அலுவலகப் பையன்; சவான்தான், எங்களிடம் உயிர்வளி உருளையை எடுத்து வருமாறு கூறினார். நாங்கள் உலோகப் பொருட்களை உள்ளே கொண்டு வரக் கூடாதே என்று கூறியபோது இயந்திரம் இயக்கம் செய்யப்படவில்லை என்றார் சவான். இதனால்தான் மரு உருளையை உள்ளே கொண்டு வந்தார். உள்ளே வந்த நொடியில் இயந்திரத்திற்குள் உயிர்வளி உருளையும் மருவும் வேகமாக உள்ளிழுக்கப்பட்டு விட்டனர்.

இந்த விவகாரத்தில் காவல்துறை தரப்பில் வேறு மாதிரியாக கூறப்படுகிறது. உலோக தள்ளுவண்டியில் வைத்து உருளை கொண்டு வரப்பட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. அப்படியானால் அந்த தள்ளுவண்டி மட்டும் எப்படி காந்த சக்தியால் ஈர்க்கப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணைக்கு மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,682

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.