Show all

இயக்குநர் ஞானவேல் அறிக்கை! ஜெய்பீம் படத்தின் சர்ச்சையை, முற்றாக முடிவுக்கு கொண்டுவரும் நோக்கவகைக்கு

இயக்குநர் ஞானவேல், தனக்குத் தனிப்பட்ட மனிதரையோ, எந்தவொரு குறிப்பிட்ட சமுதாயத்தையோ இழிவுபடுத்தும் எண்ணம் சிறிதளவும் இல்லை என்றும் ஜெய்பீம் திரைப்பட சர்ச்சைக்கு இயக்குநராக முழு பொறுப்பும் தன்னுடையது என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

05,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: ஜெய் பீம் படத்தின் சர்ச்சை தொடர்பாக வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள இயக்குநர் ஞானவேல், தனக்குத் தனிப்பட்ட மனிதரையோ, எந்தவொரு குறிப்பிட்ட சமுதாயத்தையோ இழிவுபடுத்தும் எண்ணம் சிறிதளவும் இல்லை என்றும் ஜெய்பீம் திரைப்பட சர்ச்சைக்கு இயக்குநராக முழு பொறுப்பும் தன்னுடையது என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தீபாவளியின் போது அமேசான் எண்ணிமத் தளத்தில் நேரடியாக வெளியான திரைப்படம் ஜெய் பீம். தொடக்கத்தில் இத்திரைப்படம் பலராலும் வெகுவாக பாராட்டப்பெற்றது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும் இத்திரைப்படத்தை வெகுவாக பாராட்டியிருந்தார். 

இந்தச் சூழலில் படத்தின் காட்சி ஒன்றில் குற்றம் செய்த காவல்துறை அதிகாரியின் வீட்டில் உள்ள நாட்காட்டியில் வன்னியர் சாதியைக் குறிப்பிடும் வகையிலான சின்னம் இருந்ததாகச் சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து அந்த நாட்காட்டியில் இருந்த படம் மாற்றப்பட்டது. 

ஆனாலும், ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாயம் தவறாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதாகக் கூறி ரூ. 5 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் சூர்யா மற்றும் அமேசான் நிறுவனத்துக்கு வன்னியர் சங்கம் சார்பில் கவனஅறிக்கை அனுப்பப்பட்டது. 

இந்தச் சர்ச்சை தொடர்ந்து வளர்ந்தே வரும் சூழலில் ஜெய் பீம் சர்ச்சை தொடர்பாக இயக்குநர் ஞானவேல் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். தனக்கு எந்தவொரு குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தும் எண்ணம் சிறிதளவும் இல்லை என்றும் ஜெய்பீம் திரைப்படச் சர்ச்சைக்கு இயக்குநராக முழு பொறுப்பும் தன்னுடையது என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் நிலம் எப்போதும் நல்ல முயற்சிகளை வாழ்த்தி வரவேற்கும் என்பது மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது. 'ஜெய் பீம்' படத்திற்கு மிகப்பெரிய அளவில் வாழ்த்தும் வரவேற்பும் அளித்த அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட இத்திரைப்படம், பொய் வழக்குகளால் பாதிக்கப்படும் பழங்குடி மக்களின் வலிகளைப் பிரதிபலிப்பதாக அமைய வேண்டும் என விரும்பினேன். 

முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய காலக்கட்டத்தில்- ராஜாகண்ணு, விர்பலிங்கம் போன்ற பழங்குடிகள் மரணம்- சிதம்பரம் பத்மினி, அத்தியூர் விஜயா போன்ற ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு நிகழ்ந்த துயரம்- என பல்வேறு அதிகார அத்துமீறல்கள் நடந்தன. இன்றுவரையிலும் அம்மக்களுக்கு சமூகப் பாதுகாப்பின்மையோடு அவை தொடரவே செய்கின்றன. 

எளிய மக்களுக்கு இழைக்கப்படும் அடாவடிகளை எதிர்த்து கம்யூனிஸ்ட் இயக்கமும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் தொடர்ந்து நியாயத்திற்கான போராட்டத்தை நடத்தி வருகின்றன. அறங்கூற்றுவர் சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்தபோது நடத்திய வழக்கில், காவல்துறையும் அறங்கூற்றுத்துறையும் இணைந்து செயல்பட்டால், எளிய மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்பதை நம்பிக்கை வெளிச்சம் தருகிற வகையில் படமாக்கினோம். 

தமிழ்நாட்டின் முதல்வர், ஜெய் பீம் படத்தைப் பார்த்துப் பாராட்டியதோடு பழங்குடி மக்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதியான நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் இத்திரைப்படத்தின் நோக்கத்தை முழுமை பெற செய்தார். அதற்காக எனது நன்றிகளை நமது முதல்வருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். 

ஜெய் பீம் திரைப்படத்திற்கு எல்லா தரப்பினரிடமிருந்தும் கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சி அளித்தது. அதேபோல, இத்திரைப்படத்திற்கு எழுந்த சில எதிர்மறைக் கருத்துகள் நான் சற்றும் எதிர்பாராதவை. பின்னணியில் மாட்டப்படும் ஒரு நாட்காட்டி படம், ஒரு சமூகத்தைக் குறிப்பதாகப் புரிந்து கொள்ளப்படும் என நான் அறியவில்லை. 

26 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைப் பிரதிபலிப்பதே அந்த நாள்காட்டியின் நோக்கமே அன்றி, குறிப்பிட்ட சமூகத்தின் குறியீடாக அதைக் காட்ட வேண்டும் என்பது எங்கள் யாருடைய நோக்கமும் அல்ல. சில வினாடிகள் மட்டுமே வருகிற அந்த நாட்காட்டியின் படம் படப்பிடிப்பின் போதும், முன்வெளியீட்டுப் பணியின்போதும் எங்கள் யாருடைய கவனத்திலும் பதியவில்லை. அமேசான் தளத்தில் படம் வெளிவரும் முன்பே, பெரிய திரையில் பல்வேறு தரப்பினரும் திரைப்படத்தைப் பார்த்தனர். அப்போது கவனத்திற்கு வந்திருந்தாலும் கூட, படம் வெளிவரும் முன்பே அதை மாற்றி இருப்போம். 

இருபது நாட்களுக்கு முந்தைய இரவு அமேசானில் படம் வெளிவந்தும், நாட்காட்டி படம் பற்றி சமூக வலைத்தளங்கள் மூலம் அறிந்தவுடன், உடனடியாக அடுத்த நாள் காலையே அதை மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. 

யாரும் கேட்பதற்கு முன்பே, அந்த நாட்காட்டி படம் மாற்றப்பட்ட பிறகு, எங்களுக்குத் தனிப்பட்ட உள்நோக்கம் எதுவும் இல்லை என்பது எல்லோருக்கும் புரியும் என்று நம்பினேன். இயக்குநராக நான் மட்டுமே பொறுப்பேற்க வேண்டிய விடையத்திற்கு சூர்யாவை பொறுப்பேற்கச் சொல்வது போகூழ்பாடானதே. 

தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இத்திரைப்படத்தில் சூர்யா, பழங்குடியின மக்களின் துயரங்களை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்தார். இயக்குநராக என்பொருட்டு அவருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன். அனைத்து சமூகத்தினருக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்படுத்தும் கலைவடிவமே திரைப்படம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இத்திரைப்பட ஆக்கத்தில் எந்தவொரு தனிப்பட்ட மனிதரையோ, எந்தவொரு குறிப்பிட்ட சமுதாயத்தையோ இழிவுபடுத்தும் எண்ணம் சிறிதளவும் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். 

இதன் பொருட்டு மன வருத்தம் அடைந்தவர்களுக்கும், புண்பட்டவர்களுக்கும் என் உளப்பாடான வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இக்கட்டான சூழலில் அக்கறையோடு எங்களுடன் நிற்கிற திரையுலகத்தினருக்கும், அரசியல் இயக்கங்களுக்கும், சமூக செயல்பாட்டாளர்களுக்கும், இதழியல் நண்பர்களுக்கும், ஆதரவளித்த முகமறியா அனைத்து நட்புகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். என்று அவர் தெரிவித்துள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,074.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.