Show all

மக்கள் கேள்வி! வரும் சனி,ஞாயிறு கமல்காசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வருவாரா? கொரோனா குறுவித் தொற்றில் கமல்

நடிகர் கமல்காசனுக்கு கொரோனா குறுவித்தொற்று. கொண்டாடிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டுகோள் விடுத்துள்ளார் கமல். இந்த நிலையில், வரும் சனி,ஞாயிறு  கமல்காசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தோன்றுவாரா என்பது மக்கள் கேள்வியாக உள்ளது.

06,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: நடிகர் கமல்காசன் அரசியல், திரையுலகம் என இரண்டிலும் சிறப்பான கவனத்தை செலுத்தி வருகிறார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட மிகப்பெரிய மின்மினிப் பட்டாளம் இணைந்துள்ளது.

படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையவுள்ள நிலையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கோடைக் கொண்டாட்டமாக படம் வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.

அடுத்தடுத்து வெற்றிமாறன், பா ரஞ்சித் உள்ளிட்ட இயக்குநர்களுடனும் கமல் இணைந்து படம் செய்ய உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சமூக வலைதளங்கள் மூலம் பல்வேறு பிரச்சினைகளுக்கும் அவர் மக்கள் நீதி மய்யம் மூலம் குரல் கொடுத்து வருகிறார்.

அமெரிக்காவில் ஆடை வடிவமைப்பு குறித்த புதிய வணிகத்தைத் தொடங்கும் பொருட்டு அவர் அமெரிக்காவின் சிகாகோவிற்கு சென்றிருந்தார். இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து திரும்பிய அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தற்போது இந்தியா திரும்பியுள்ள அவருக்கு மிதமான இருமல் இருந்ததாகவும் அதையொட்டி பரிசோதனை செய்ததில் தனக்கு கொரோனா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் மருத்துவமனையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அவர் தனது கீச்சுப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

திரையுலகம், அரசியல், விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி, தற்போது அமெரிக்காவில் வணிகம் என்று தொடர்ந்து பரபரப்பாக செயல்பட்டு வருபவர் நடிகர் கமல்காசன். இந்நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அவரின் கொண்டாடிகளிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதனால் விக்ரம் படத்தின் வெளியீடு இன்னும் தள்ளி;ப் போகுமா? பிக்பாஸ் நிகழ்ச்சியில் எதிர் வரும் அத்தியாயங்களில் தோன்றுவாரா? என்றவாறான கேள்விகள் பேசுபொருளாகி வருகின்றன. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,075.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.