Show all

பிள்ளைகளை எந்தப் பள்ளியில் சேர்ப்பது நல்லது! அரசுப்பள்ளி? தனியார்பள்ளி?

வேறு ஒரு தளத்தில், பிள்ளைகளை எந்தப் பள்ளியில் சேர்ப்பது நல்லது! அரசுப்பள்ளி? தனியார்பள்ளி? என்று கேட்டிருந்த வினாவிற்கு விடையாக உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. 

06,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5125. 

உங்கள் எதிர்காலம், உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம், உங்களின் நடப்பு பொருளாதார நிலை இவைகளை அடிப்படையாகக் கொண்டே உங்கள் வினாவிற்கு சரியான விடையைத் தீர்மானிக்க முடியும். 

ஒரு குடும்பத்தின் அண்ணன் தம்பி இருவர் தங்கள் பிள்ளைகளுக்கு முப்பத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என்ன வகையான கல்வியைத் தேர்ந்தெடுத்தார்கள்? அவர்களின் பொருளாதார நிலை எப்படி இருந்தது? தற்போது அவர்களின் எச்சங்களின் நிலை என்ன? என்கிற ஒரு உண்மை நிலவரத்தை இந்த வினாவிற்கு விடையாக்க விரும்புகிறேன்.

அண்ணன்: 
சுமையுந்து (லாரி) உடமையாளர். சுமையுந்து பேணுனராக, ஓட்டுனராக பயணித்து, சுமையுந்து உடமையாளராக உயர்ந்தவர். அவரின் கல்வித்தகுதி எட்டாம் வகுப்பு. அவரின் மனைவியின் கல்வித்தகுதி பதினொன்றாம் வகுப்பு. 

அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை, ஒரு ஆண் குழந்தை. பெண் குழந்தையை, அன்றாடம் தனியார் பேருந்தில் பயணிக்கும் வகையில் பத்து கிமீட்டர் தூரத்தில் அமைந்த, கொஞ்சம் கட்டணம் குறைந்த, தனியார் கிறித்துவ, பதின்மப் (மெட்ரிக்) பள்ளியில் பயிற்றுவித்தனர். அந்த பெண்பிள்ளை பனிரெண்டாம் வகுப்பு பாதி வரை அந்தப் பள்ளியில் படித்தாள். 

இரண்டாவதான ஆண் பிள்ளையை அந்தப் பகுதியில் நடுத்தட்டு மக்கள் பேரறிமுகமாகக் கொண்டாடும், துள்ளுந்தில் கொண்டு சென்று விடும் வகையாக பக்கத்தில் அமைந்த தனியார் பதின்மப் பள்ளியில் பயிற்றுவித்தனர்.

ஆண்பிள்ளை அந்தப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு முடித்து மாவட்டத் தலைநகரில் அமைந்த தனியார் பேரறிமுகக் கல்லூரியில் வணிக நிருவாக இளவல் (பிபிஏ) படிப்பை முடித்தான்.

பெண் பிள்ளையை துகில் வணிகத்தில் ஈடுபட்டவருக்கு திருமணம் செய்து வைத்தனர். திருமணத்தின் போது மச்சானின் மேற்படிப்புக்கு சில ஆயிரங்கள் எளிமையாக உதவியிருந்தவர் பிற்காலத்தில் வணிகத்தில் நசிந்து போனார். மாமனாரிடம் பல இலட்சங்கள் உதவிபெற வேண்டிய இக்கட்டுக்கு ஆளானார். அவருக்கு இரண்டு பிள்ளைகள். பேரறிமுக ஆங்கிலப் பள்ளியில் படிப்பு முடித்து கல்லூரியில் ஆண் இறுதியாண்டும் பெண் முதலாம் ஆண்டும் படித்து வருகின்றனர்.

ஆண் பிள்ளை வங்கிப் பணியில் இணைந்து நல்ல வருமானம் பெற்றாலும் தொடர்ந்து தந்தைக்கு பொருளாதார நிர்பந்தம் கொடுத்து வந்திருந்தார். அவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் இரண்டும் பேரறிமுக ஒன்றியப் பாடத்திட்ட ஆங்கிலவழிப் பள்ளிகளில் மூன்று ஆறு வகுப்புகள் பயின்று வருகின்றனர். 

அண்ணன்- இரண்டு பிள்ளைகளோடும் இல்லாமல், கணவன் மனைவி மட்டும் சொந்த வீடு தொழில் என்று, அவ்வப்போது மகனுக்கும் மகளுக்கும் தொடர்ந்து இலட்சங்களில் உதவிக் கொண்டு, வாழ்ந்து வந்திருந்தார். அண்மையில் அண்ணன் காலமான நிலையில், தற்போது பிள்ளைகள் இரண்டும் அப்பாவின் (அண்ணன்) சில கோடி சொத்துக்களுக்கும். தொழிலுக்கும் அடித்துக் கொண்டு, கட்டப்பஞ்சாயத்து, காவல்துறை, அறங்கூற்று மன்றம் அலைந்து கொண்டும் செலவழித்துக் கொண்டும் உள்ளனர்.

அண்ணன் நிறைய சம்பாதித்தார் பிள்ளைகளுக்கு நிறைய செலவு செய்து மேல்தட்டுக் கல்வியைக் (ஆங்கில வழிக்கல்வி) கொடுத்தார். பிள்ளைகள் எத்தனை சம்பாதிப்பதாக பீற்றிக் கொண்டாலும் இரண்டுக்கும் சொந்த வீடு இல்லை. பெண்பிள்ளை மாமியாரை இணைத்துக்கொள்ள வில்லை. அண்மையில் அவர்களும் காலமாகி விட்டார்கள். ஆண்பிள்ளை இப்போதுதான்  அப்பாவின் தொழிலையும தன் வங்கிப் பணியையும் ஒருசேர கவனித்து வருகிறான். பிள்ளைகள் இரண்டுக்கும் மேல்தட்டு வாழ்க்கைக்குப் பணம் போதவில்லை. 

தம்பி: 
அரசு தொழிற்பயிற்சி நிறுவன சான்றிதழ் பெற்ற மின்பணியாளர், இரும்பு வேலைப்பாட்டாளர், தமிழ் ஆர்வத்தில் தொலைதூரக்கல்வியில் சென்னைப் பல்கலைகழகத்தில் தமிழ் இலக்கியவியல் இளவல் பயின்றவர், பல்வேறு தமிழ் அமைப்புகளில் ஈடுபட்டவர், நண்பர்களுடன் இணைந்து தாய்த்தமிழ்ப் பள்ளி ஆறாண்டு காலம் நடத்தியவர், அரசு பதிவுடன் விசும்பு என்கிற மாத இதழை எட்டாண்டு காலம் நடத்தியவர். பொருளாதாரத் தேடல் நோக்கில் ஐம்பதுக்கும் மேற்பட்ட தொழில்களுக்கு மாறியவர். அவரின் மனைவி தொடக்கல்வி மட்டுமே பயின்றிருந்தாலும், கதை, கவிதை, கட்டுரை, திரையுலகச் செய்திகள் படிப்பதில் மிகுந்த ஆர்வமுள்ளவர். 

அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை, ஒரு ஆண் குழந்தை. இரண்டு பிள்ளைகளுமே பள்ளிப் படிப்பை அரசுப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வியில் முடித்தனர். பெண் பிள்ளை தொலைதூரக்கல்வியில் கலைமுதுவர் தமிழ் (எம்.ஏ) பட்டப்படிப்பு முடித்துள்ளார்.

ஆண் பிள்ளை சிறப்புக் கல்வித் தகுதியில் அரசு பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் பொறிஞர் படிப்புக்குத் தேர்வாகி படிப்பை முடித்து நல்ல நிறுவனத்தில் வேலை பெற்று, திருமணமாகி சொந்த வீடு வங்கி அப்பா அம்மாவை இணைத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார்.

பெண் பிள்ளை திருமணமாகி புகுந்த வீட்டில் மாமியாரை இணைத்துக் கொண்டு சொந்த வீடு கட்டி வாழ்ந்து வருகிறார். 

தம்பி செலவில்லாமல் பண்பாட்டுக் கல்வி (தமிழ்வழிக் கல்வி) கொடுத்தார். பிள்ளைகளை மட்டுமே சொத்தாக நினைத்து அந்த சொத்துகளின் ஆதரவில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். தற்போதைய அவரின் அகவை அறுபத்தியேழு.

முடிவுரையாக:
தனியார் பள்ளியில் ஆங்கில வழியில் படிக்கும் பிள்ளை மேல்தட்டு மனநிலைக்குப் பழகுகிறது. 

தனியார் பள்ளியில் தமிழ்வழிக் கல்வியில் படிக்கும் பிள்ளை கட்டுப்பாடோடான ஒப்புரவு மனநிலையைப் பழகுகிறது.

அரசுப்பள்ளியில் தமிழ்வழிக் கல்வியில் படிக்கும் பிள்ளை விடுதலை உணர்வோடு ஒப்புரவு மனநிலையைப் பழகுகிறது.

அரசுப் பள்ளியில் ஆங்கில வழியில் படிக்கும் பிள்ளை மேல்தட்டு மனநிலையும் இல்லாமல், ஒப்புரவு மனநிலையும் இல்லாமல், வீட்டில் கட்டுபாடும் பள்ளியில் விடுதலையுமாக இரண்டு கெட்டான் மனநிலைக்குப் பழகுகிறது. 

தனியார்ப் பள்ளியோ, அரசுப்பள்ளியோ தமிழ்வழிக்கல்விதான் சிறந்தது.

ஆங்கில வழிதான் வேண்டும் என்றால் ஒருபோதும் அரசுப்பள்ளி வேண்டாம்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,714.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.