Show all

யார் அந்த அந்தணன்? யாவர் அந்த அந்தணர்?

அந்தணன், பார்ப்பான் என்று திருவள்ளுவர் முன்னெடுக்கும் சொல் ஆரிய பிராம்மணர்களைக் கொண்டாடும் சொற்களாக பேரளவாகப் போற்றப்பட்டு வருகிறது. அந்தக் கொண்டாட்டம் வள்ளுவர் பார்வையா? திட்டமிட்ட திரிப்பா என்று ஆய்கிற நோக்கத்திற்கானது இந்தக் கட்டுரை.

15,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5125. 

திருக்குறளில் அந்தணன் என்கிற சொல் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் ஒரு குறளிலும், அந்தணர் என்கிற சொல் நீத்தார் பெருமை அதிகாரத்தில் ஒரு குறளிலும், அந்தணர் என்கிற சொல் மீண்டும் செங்கோன்மை அதிகாரத்திலும் வருகிறது. பார்ப்பான் என்கிற சொல் ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் ஒரு குறளில் வருகிறது.

இந்த நான்கு குறள்களிலும் திருவள்ளுவர் பார்வை என்னவாக இருந்திருக்க முடியும் என்று அறிந்து கொள்வதற்கும், அதைத் தமிழ்மக்களிடம் பகிர்வதற்கும் நமது ஆய்வைத் தொடங்குவோம்.

அந்தணர் என்கிற சொல் கடவுள் வாழ்த்து அதிகாரத்தின் எட்டாவது குறளில்தான் பயின்று வருகிறது. அந்தக் குறளில் திருவள்ளுவர் பார்வையைத் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு கடவுள் வாழ்த்து அதிகாரம் முழுமையும் பார்த்துவிடுவது சிறப்பாகும்.

திருக்குறளின் முதலாவது அதிகாரமான, கடவுள் வாழ்த்து நம்மால் உருவான, முதல் கடவுள்கூறுதெய்வம் ஆன தமிழை வாழ்த்துவதற்கு முன்னெடுக்கப்பட்டதாகும். 

தமிழர்களோடு கலந்த பிராமணர்கள், தமிழைக் கற்று தமிழுக்குப் பிராமணிய முலாம் பூசுவதையே பலஆயிரம் ஆண்டுகளாகத் தங்கள் வாழ்மானமாகக் கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில்- முயற்சியைக் கொண்டாடுகிற திருக்குறளுக்கு, தங்கள் தொன்ம வழிகாட்டிகளின் இடுகுறியான செய்திகளைக் கொண்டாடுகிற பிராமணியச் சாயம் பூசுகிற முன்னெடுப்பே கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் அமைந்த குறள்களுக்கு தெளிவுரை சொன்னதும், இதுவரை சொல்லப்பட்டு வருகிற தெளிவுரைகளும் ஆகும்.

குறள் 1:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
அ என்கிற எழுத்தே முதல். வலிமையாகச் சொல்லுகிறார். அடித்துச் சொல்லுகிறார் திருவள்ளுவர். 
கொண்டாட வேண்டியதும், தூக்கிப் பிடிக்க வேண்டியதும், அகரமே (தமிழே). 
ஒலியன் எழுத்து முறையாக, உலக மொழிகளில் தமிழ் மட்டுமே கூட்டி ஒலித்தால் சொல் வருகிற வகையில் எழுத்துக்களைக் கொண்டிருக்கிற நிலையில், ஒட்டுமொத்த ஒலிகளையும் ஒலியன் முறையில் எழுதிவிடக் கூடிய முதல் எழுத்துக்கள் என தமிழ்மொழி சுட்டுகிற முப்பது எழுத்துக்களுக்கும் முதல் எழுத்து 'அ'வே. எனவே அகரத்தைக் கொண்டாடுவோம் என்கிறார் திருவள்ளுவர்.

எவ்வாறெனில் உலகங்களுக்கெல்லாம் (கோள்களுக்கு எல்லாம்) தொடக்கமாக இருக்கிறது பகவன் என்கிற ஞாயிறு என்பது போல. 

இந்தக் குறளில் எழுத்துக்களில் அகரத்தின் முதன்மையை விளக்குவதற்கு வானியலை மேற்கோள் காட்டியதால், முதலெனப்படுவது இடமும் காலமும் என்று நிறுவிய தமிழ்முன்னோர், 'காலத்தை' வாழ்ந்த பாடுகளின் மிகப்பெரிய அறிவாகக் கெண்டிருந்தனர் என்பதை உணர்த்துவதாகும். 

அதாவது படிப்பறிவுக்கு வருவதற்கு முன்பே தமிழ்ப்பிள்ளைகளும் தமிழ்மக்களும் கோள்களை அறிவர். ஆனால் படிப்புக்கு வருவதற்கு முன்பு எந்தப் பிள்ளையும் எழுத்தையும் எழுத்தின் வரிசையையும் அறிய மாட்டாது அல்லவா? 

அதனால்தான் திருவள்ளுவர், கோள்களில் முதன்மையானது என்று, மக்கள் அறிந்திருக்கிற பகவனை (ஞாயிறு) அகர முதன்மைக்கு உவமை ஆக்குகிறார்.

தமிழை வாழ்த்துவதற்கு அகரத்தை தூக்கிப் பிடிப்பதே திருவள்ளுவருக்கு சிறப்பெனத் தோன்றியிருக்கிறது. அதனாலேயே கோள்களுக்கெல்லாம் முதன்மையானது பகவன் போல எழுத்துக்களுக்கு முதன்மையானது அகரம் என்று கொண்டாடுகிறார் திருவள்ளுவர். மேலும் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிக்கிறார் தனது திருக்குறளை திருவள்ளுவர்.

குறள் 2:
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
கல்வி என்ற அதிகாரத்தில் எண்ணும் எழுத்துமான மொழியை மக்களின் கண்கள் என்கிறார் திருவள்ளுவர்.

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு
என்கிற குறள் மூலமாக.
இப்படிப்பட்ட கண்போன்ற போன்ற மொழியை, அறிவை (வாலறிவன்) அதன் அடிப்படைகளை (நற்றாள்) கொண்டாடா விட்டால் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்னவாக இருக்க முடியும்? என்கிறார் திருவள்ளுவர்.

ஆகவே கல்விக்கு அடிப்படையான அகரத்தை முதலாகக் கொண்ட மொழியை- தமிழை- அதன் அடிபடைகளைத் தொழுது கொண்டாடுவோம் என்கிறார் தமிழ் (கடவுள்) வாழ்த்து அதிகாரத்தின் இரண்டாவது குறளில் திருவள்ளுவர்.

குறள் 3:
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
தமிழ்முன்னோர் ஆற்றல் மூலங்களாக நிறுவியுள்ள, கடவுளும், இறையும் பல்வேறு உருவாக்கங்களில் தொய்ந்திருக்கிற காரணம் பற்றி, நம்மால் உருவாக்கப் பட்டது எல்லாம் கடவுள் கூறு. நம் உருவாக்கத்தில் பங்கு வகிப்பது எல்லாம் இறை கூறு ஆகும். கடவுள் கூறையும், இறைக் கூறையும் தெய்வமாக வழிபடுவது தமிழர் மரபு ஆகும்.

தமிழ்முன்னோர் நிறுவியுள்ள உடல் இறையாகிறது உயிர் காலமாகிறது என்கிற அடிப்படையில், தமிழ்முன்னோர் தம்மின் தம் மக்கள் அறிவுடைமையைக் கொண்டாடுகிற மரபினர் என்கிற நிலையில், தம்மக்களின் அறிவுக்கு தோள் கொடுக்கும் தரவுத் தமிழாக (மலராக) காலமான அனைத்து முன்னோரும் கடவுளில் அமைந்துள்ளனர். 
 
அந்தத் தமிழைக் கொண்டாடியிருக்கிற தமிழ்மக்கள் நிலத்தின் கண் நெடு வாழ்க்கை வாழ்வார்கள் என்று தெரிவிப்பதற்கானது இந்த மூன்றாவது குறள்.

குறள் 4:
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.  
வேண்டுதல் வேண்டாமை பாராட்டாத தமிழின்- அடிப்படைகளைக் கொண்டாடி இருப்பவர்களுக்கு எப்போதும் துன்பம் இல்லை என்கிறது இந்தக் குறள்.

குறள் 5:
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
இருவேறு உலகத்து இயற்கை என்பதை அறிந்து கொள்ளா நிலையால் வருகிற பொருள்முதல் மயக்கமும் கருத்துமுதல் மயக்கமும் ஆகிய இரண்டு வினைகளும் சேராது. அதற்கான பொருள் பொதிக்கபட்டிருக்கிற தமிழைப் புரிந்து கொண்டால் என்கிறது இந்தக் குறள்.

இன்றுவரை பாகுபாடு முரண்பாடு என்பதான பொருள்முதல் கருத்து முதல் என்கிற கோட்பாடுகளில் பிரிந்து இயங்கி பிணக்குகளில் உலா வருகிறது உலகம். 

தமிழோ! 
முதலெனப்படுவது இடமும் காலமும்
இருவேறு உலகத்து இயற்கை
ஒன்று என்கிற சொல்லிலேயே ஒன்றிய இரு 
என்பனவாக எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்று, தமிழ்ச்சொற்களிலேயே, தமிழியலை நிறுவியுள்ளதை உலகம் புரிந்து கொண்டால் பிணக்குகள் இல்லவேயில்லை என்கிறார் இந்தக் குறளில் திருவள்ளுவர். 

குறள் 6:
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
மெய், வாய், மூக்கு, கண், காது என்கிற ஐம்புலன்களில் அவித்த மனத் (ஆறாவது அறிவு) தமிழின் பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்று இயங்குகிறவர் நெடுவாழ்க்கை வாழமுடியும் என்கிறது இந்தக் குறள்.

குறள் 7:
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. 
முதலாவது குறளில் எழுத்துக்களில் அகரத்தின் முதன்மையை விளக்குவதற்கு வானியலை மேற்கோள் காட்டிய அதே திருவள்ளுவர் அகரமாக தமிழை, நமது வாழ்க்கையில் உவமை சொல்ல முடியாத ஒன்றாகக் கொண்டாடுகிறார் இந்தக் குறளில். 

நம்மால் உருவாக்கப்பட்ட முதலாவது கடவுள் கூறு ஆன தனக்கு உவமை இல்லாத தமிழின் அடிப்படைகளை புரிந்து கொண்டவர்களுக்கு அல்லாமல் மற்றவர்களுக்கு மனக்கவலை இருந்து கொண்டிருப்பதை தவிர்க்க முடியாது என்று தெரிவித்து தமிழின் அடிப்படைகளை 'பற்ற' வலியுறுத்துகிறார் திருவள்ளுவர் இநதக் குறளில்.

குறள் 8:
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.  

வாழி என்பன கடலும் நிலமும் ஆன இரண்டு வாழிடங்கள் ஆகும். அதுபோல அறம் என்பது ஒரு வாழி என்றால் பொருள் என்பது மற்றொரு வாழி ஆகும். அறவாழிக்கான தெய்வம் அந்தணன் என்கிற தமிழே ஆகும்.
 
அந்தம் என்பது முடிவு அணன் என்பதற்கு ஏகினவன் என்பதாக அந்தணர் என்பதற்கு தமிழ்முன்னோர் என்கிற பொருளைத் தமிழ் பொதித்துக் கொண்டுள்ளது. ஆக அறவாழி அந்தணன் என்பதற்கு அறவாழ்க்கை குறித்து தெளிவாக நிறுவிச்சென்றுள்ள தமிழ்முன்னோராகிய தெய்வம் என்கிற பொருள் பொதிக்கப்பட்டுள்ளது. 

அறவாழ்க்கை குறித்து தெளிவாக நிறுவிச்சென்றுள்ள தமிழ்முன்னோர் அடிப்படைகளை பின்பற்றியவர்களைத் தவிர மற்ற எவராலும் பிற கடலைக் கடக்க முடியாது என்கிறார் இந்தக் குறளில் திருவள்ளுவர்.

குறள் 9:
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.  
கோளில் என்பது நாம் வாழும் புவியையும் அதன் பொறிகளாக எட்டுத் திக்குகளையும் அறியும் வகையற்றவர்களாகி விடுவீர்கள் புவியின் எட்டுத் திக்குகளையும் விவரிக்கிற ஆற்றல்பெற்ற தமிழின் அடிப்படையை வணங்காத போது என்கிறார் இந்தக் குறளில் திருவள்ளுவர்.

குறள் 10:
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
வாழ்க்கையைக் கடப்பதை. பெருங்கடலை நீந்துவது என்று தமிழர் பேரளவாகப் பேசுவதன் காரணம், தமிழன்- உலகின் முதல்கடலோடி என்கிற காரணம் பற்றியதாகும்.
வாழ்க்கையை நடத்தி முடிப்பவர் தமிழ் என்கிற இறைமையின் அடி தொட்டவர் மட்டுமே. மற்றவருக்கு அது சாத்தியம் இல்லை என்கிறார் திருவள்ளுவர் கடவுள் வாழ்த்தின் இறுதிக் குறளில்.

அடுத்து நாம் பார்க்க வேண்டியது நீத்தார் பெருமை என்கிற அதிகாரத்தில் வருகிற
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.  
எனும் குறளில் அமைந்த அந்தணர் என்கிற சொல்லை ஆகும்.

நீத்தாரை தெய்வத்திரு என்று கொண்டாடுவது தமிழர் மரபு. நம்முடைய குலதெய்வமாக இருக்கிற தமிழ்;முன்னோர் ஆகிய அந்தணர்கள் அறவோர் ஆவார்கள். ஏனெனில் எவ்வுயிருக்கும்   செந்தண்மை பூண்டொழுகும் ஒப்புரவை நிறுவிச்; சென்றுள்ள காரணம் பற்றி என்கிறார் திருவள்ளுவர்.

அடுத்து நாம் பார்க்க வேண்டியது செங்கோண்மை அதிகாரத்தில் வருகிற
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். 
எனும் குறளில் அமைந்த அந்தணர் என்கிற சொல்லை ஆகும்.

தமிழ்முன்னோர் என்கிற அந்தணர் வகுத்த நூலுக்கும் அந்த நூல் பேசும் அறத்திற்கும் அடிப்படை தமிழ் மண்ணில் கோலோச்சி வரும் மன்னவர்களின் ஒப்புரவு ஆட்சி நெறியே என்று தெரிவிக்கிறார் திருவள்ளுவர் இந்தக் குறளில்.

அடுத்து நாம் பார்க்க வேண்டியது ஒழுக்கமுடைமை என்கிற அதிகாரத்தில் வருகிற
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். எனும் குறளில் அமைந்த பார்ப்பான் என்கிற சொல்லை ஆகும். பார்ப்பான் என்கிற சொல்லின் விரிவை இந்த இணைப்பு தெளிவாகப் பேசுகிறது.

பார்ப்பான் என்கிற தலைப்பை தொல்காப்பியம் பேசுகிற வகையோடு பொருத்திப் பார்க்கிற போது, தமிழ்மண்ணில் நடைமுறையில் இருந்த பார்ப்பான் என்கிற சொல் அடுத்த வீட்டை எட்டிப்பார்த்திருக்கும் தகவல் ஆர்வலர், திண்ணைப் பேச்சாளர், இன்றைக்கு சமுக வலைதளங்களைக் கலக்கும் கருத்துப் பதிவர்களை போன்ற தனிமனித ஆர்வலர்களைக் குறிப்பதற்கான சொல்லாகவே பார்ப்பார் என்கிற சொல் அன்றைய தமிழ்மண்ணில் பயன்பாட்டில் இருந்திருக்கிறது என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

பார்ப்பார் என்பது ஒரு சாதியோ, பிறப்பு அடிப்படையான இனக்குழுவோ அல்ல. திராவிட இயக்கத் தோற்றத்திற்குப் பின்பே தமிழ்நாட்டு பிராமணர்களைப் பார்ப்பனியர் என்றும் அவர்களின் பிராம்மணியக் கோட்பாட்டை பார்ப்பனியம் என்றும் பேசுகிறபாடு, முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

பார்ப்பான், பார்ப்பனியம், என்கிற சொற்களை விடுத்து தமிழ்ப்பிராமிணர் என்கிற சொல்லை அந்த வகைக்குப் பயன்படுத்துவோமாக.

அதேபோல அந்தணர் என்கிற சொல்லில் பிராமணர்களைச் சுட்டுவது பொருட்குற்றம் ஆகும். அந்தணர் என்பவர்கள் வாழ்ந்திருந்த பெரும் சான்றோர்களே அன்றி, வாழுகிற எவரும் இல்லை. அந்தணர் என்போர், தமிழ்மன்னர்களின் தமிழியல் ஆட்சி முறைகளில் இருந்து, ஒப்புரவுக் கோட்பாட்டை நிறுவிக் கொடுத்தும், ஒழுகியும் வாழ்ந்திருந்த தமிழ்முன்னோர்கள் மட்டுமே ஆவர். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,723.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.