Show all

தமிழர் மெய்யியலில் உலகத்தோற்றம்

உலகத் தோற்றம் குறித்த தமிழர் கருதுகோள் உலகினர் கருதுகோளுக்கு முற்றிலும் வேறானது.
மதம் சார்ந்தவர்கள்-
உலகம் படைக்கப் பட்டதாக கூறி வருகின்றார்கள்.
விஞ்ஞானம் சார்ந்தவர்கள்-
பெருவெடி- சிதறிய கோள்கள், விண்மீன்கள்- ஞாயிறு; ஞாயிறிலிருந்து பிரிந்த உலகு- ஆர்கானிக் பரிணாம உயிர்த் தோற்றத்தின் வழி தாவரங்கள் குரங்கு வரை விலங்குகள் குரங்கிலிருந்து மனிதர்கள் தோன்றியதாகவும் கூறி வருகின்றார்கள்.
மார்க்சிய வாதிகள்-
படைப்பாளி என்பது ஒரு கருத்து என்றும், உலகம் படைக்கப் பட்டதாக கூறுவது கருத்து முதல்வாதம் என்றும், மதங்கள் கூறும் படைப்பாளி இல்லவேயில்லை யென்றும், பொருளே முதல் என்றும் பொருளிலிருந்தே கருத்து என்றும், மனிதனுடைய கையே மனிதனுக்கு கருத்து தோன்றுவதற்கான அடிப்படை யென்றும் கூறி வருகின்றார்கள்.
தமிழர்கள்-
வானவெளி. வானவெளியில் ஞாயிறு மையமாக அமைந்து தன்னைத்தானே சுழன்று கொண்டிருக்க, புதன், வெள்ளி, புவி, புவியைச் சுற்றி வரும் நிலா, செவ்வாய், வியாழன், சனி, நெப்டியூன் யுரேனஸ் என்று கோள்கள் ஞாயிறு மண்டலத்தில் சுற்றி வருகின்றன. நாம் புவியில் இருந்து கொண்டு இந்த இயக்கத்தல் பங்கேற்கிறோம். நம்மைச் சூழ்ந்து வாழும் விலங்குகள், தாவரங்கள், நமது கண்டுபிடிப்புகள், கருவிகள் அனைத்தும் இந்த இயக்கத்தில் பங்கேற்கின்றன. 

இத்தனையும் விசும்பு, நிலம், நீர், தீ, காற்று ஆகிய ஐந்திரங்களில், விசும்பு தவிர்த்த நான்கு திரங்களுக்குள் அடங்கும். இதனால்தான் தமிழர்கள்: அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில், பிண்டத்தில் உள்ளதே அண்டத்தில் என்றார்கள். 

இப்படி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் இந்த இயக்கம் தொடரும் போது, வெளியில் ஓர் எதிரியக்கம் உருவாக்கப்பட வெளி- விண்வெளியாகி, அனைத்தையும் மையத்தை நோக்கி நெருக்கும். அதாவது: ஒரு விரிப்பை தரையில் விரித்து, நாம் நடந்து, அமர்ந்து, படுத்து பயன்படுத்தும் போது அந்த விரிப்பு மையம் நோக்கி திரண்டு வரும்; அதுபோல. 

வெளியில் உள்ள எல்லாக் கோள்களும் மையத்தை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கின்றன பல ஆயிரம் ஆண்டுகளாக. ஒரு எல்லையில் எல்லாக் கோள்களும் ஒரே உருண்டையாக சுழலத் தொடங்கி விடும். அப்படி சில ஆயிரம் ஆண்டுகள் சுழல, சுழல மிக இறுகி, ஓர் எல்லையில் அந்த உருண்டை வெடித்துச் சிதறும். இந்தப் பெருவெடிக் கொள்கையை விஞ்ஞானமும், தமிழ் மெய்யியலும் ஏற்றுக் கொள்கின்றன.

ஆனால் இந்தப் பெருவெடியையே தொடக்கமாகக் கொள்கிறது விஞ்ஞானம். அதன் பிறகு பல்வேறு கோள்களாக வெடித்துச் சிதறி, ஞாயிற்றிலிருந்து புவி பிரிந்து, நீண்ட காலம் மழை பொழிந்து புவி குளிர்ந்து, புவி மூன்று பங்கு நீரால் சூழப்பட்டு, அந்த நீரில், ஆர்கானிக் பரிணாம உயிர்த் தோற்றத்தின் வழி தாவரங்கள் குரங்கு வரை விலங்குகள், குரங்கிலிருந்து மனிதர்கள் தோன்றியதாகவும் கூறி வருகின்றார்கள் விஞ்ஞானிகள். 

இரும்பு- இரண்டோ, இரண்டுக்கு மேற்பட்ட துண்டுகளோ ஆனால் ஒவ்வொரு துண்டும் இரும்பாக, இரும்பின் இயல்போடுதான் இருக்கும். இப்படித்தான் ஒவ்வொரு பொருளும். திரண்ட ஒரு பெரிய உருண்டை வெடித்துச் சிதறுதலில் பல்வேறு இயல்புகள் உள்ள பல்வேறு பொருள்கள், தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் வந்ததாக சொல்லுவது, 
மதங்கள் சொல்லுவதை போலவே, இதுவும் ஏறத்தாழ படைப்பை உள்வாங்கிய செய்தியாகவே இருக்கிறது. சிறிய உயிர் எப்படியோ வந்து விட்டது. அதிலிருந்து பெரிய உயிர்கள் பரிணாமத் தோற்றம் பெற்றன என்று தெரிவிக்கிறது விஞ்ஞானம். 

தமிழ்மெய்யியல் சொல்லுவது:-
வெடித்துச் சிதறிய உருண்டை பல பல கோடி அடிப்படை பொருளாக, தனி ஒன்றுகளாக, ஒவ்வொன்றும் தான் தோன்றி இயக்கம் உடைய விதையாக, மிக மிக சிறு சிறு புள்ளிகளாக வெளியில் சிதறி சுழன்றன. 

வெளி இடமாகவும், இந்தத் தனி ஒன்றுகளைக் காலமாகவும் முதல் எனப்படுவது  இடமும் காலமும் என்கிறான் தமிழன். இந்த தனி ஒன்றுகள் இரண்டாக, மூன்றாக நான்காக, இணைகிற போது வெவ்வேறு இயல்புகளை பெறுகின்றது.

ஆக எண்ணிக்கை மாற்றமே இயல்பு மாற்றத்திற்கான காரணமாகும். தமிழன் நிலம் நீர் தீ காற்று என்று நான்கு இயல்புள்ள பொருள்கள் இந்த எண்ணிக்கை மாற்றத்தால் தோன்றிதாக தெரிவிக்கிறான்.
விஞ்ஞானம் பொருள்களின் அடிப்படையான இயல்புகளை வைத்து 103 தனிமங்களாகப் பட்டியல் இடுகின்றன. அங்கேயும் எண்ணிக்கை மாற்றம் இயல்பு மாற்றத்திற்கான காரணம் என்பதை ஒப்புக் கொள்ளவும், ஒன்றிலிருந்து வேறாக எண்ணிக்கையை மாற்றி, மாற்றிக் கொள்ள முடியும் என்று ஒத்துக் கொண்டிருக்கிறது. 

ஒரு நேர் (எலக்ட்ரான்) ஒரு நிரை (புரட்டான்) இருந்தால் அது நீர்வளி (ஹைட்ரஜன்) 
இரண்டு நேர் (எலக்ட்ரான்) இரண்டு நிரை (புரட்டான்) இருந்தால் அது ஹீலியம். 
79 நேர் (எலக்ட்ரான்) 79 நிரை (புரட்டான்) இருந்தால் அது தங்கம்.
26 நேர் (எலக்ட்ரான்) 26 நிரை (புரட்டான்) இருந்தால் அது இரும்பு. மிக நெடிய ஆபத்தான செயல் முறைகள் மூலம் இரும்பைத் தங்கமாகவும், தங்கத்தை இரும்பாகவும் மாற்ற முடியும் என்கிறது விஞ்ஞானம்.

தமிழ் மெய்யியல் அடிப்படையாக முதல் எனப்படுதது இடமும், பொழுதும் எனவும் சார்பு நிலையாக நிலம், நீர், தீ, காற்று எனும் நான்கே அடிப்படைகளோடு முடித்துக் கொண்டது. 

விஞ்ஞானம் அடிப்படையாக நேர் அணுத்துகள், நிரை அணுத்துகள் என்கிற இரண்டு அடிப்படைகளோடும், சார்பு நிலையாக, தனிமங்கள் என்கிற 103 அடிப்படைகளை பட்டியல்  இடுகிறது. 
ஆக, தனிமங்களிலேயே எண்ணம் கருத்து என்பவைகளுக்கான அடிப்படை- 'இயக்கமாக” இருக்கிறது என்பதே தமிழர் கண்டுபிடிப்பு. 
எண்ணம் மனம் கருத்து உயிர் என்பனவெல்லாம் திடிரென்று எங்கிருந்தோ தோன்றி படிரென்று எங்கோ மறைந்து போகும் என்கிற கற்பனாவாதம் எல்லாம் நம் பழந்தமிழர்க்கு உடன்பாடில்லை. 
ஒன்று என்கிற முதல் எண்ணை -தனிஅன்று- ஒன்றியது என்கிற பொருளில் ஒன்று என்றார்கள். 
முதல் எனப்படுவது இடமும் காலமும் என்றார்கள். 
இருவேறு உலகத்தியற்கை என்றார்கள். 
பொருள், கருத்து இரண்டும் மூலமுதல் என்று நிறுவினர்கள்.
இடம் என்பதும் திரு என்பதும்- பொருள்.
காலம் என்பதும் தெள்ளியராதல் என்பதும்- கருத்து.
ஆக கருத்தும் பொருளும் சேர்ந்தே இருப்பது என்பதே தமிழர்தம் கருதுகோள்!
நாம் படைக்கப் பட்டதான கருதுகோளில் தமிழர்க்கு உடன்பாடில்லை.
நாம் தான்தோன்றியாக தோன்றுவதற்கு நிலம், நீர், காற்று, தீ, விசும்பு என ஐந்து ஆற்றல்களை முன்வைத்தார்கள்.
நிலம், நீர், தீ, காற்று எனும் நான்கும் தான்தோன்றி இயக்கம் உடைய ஆற்றல்கள்.
அவை வடிவம் எல்லை இயக்கம் உடைய பொருள்கள்.
விசும்பு என்பது-
ஒவ்வொரு பொருளின் உள்ளேயும் வெளியேயும் (கடந்தும் உள்ளும்) தான்தோன்றி இயக்கம் இல்லாத அண்டவெளியாகவும், அந்த அண்டவெளியைத் தளமாகக் கொண்டு இயங்கும், தான்தோன்றி இயக்கமுடைய பொருள்களின் இயக்கத்தால் அண்டவெளி- இயக்கம் பெற்ற அண்ட விண்வெளியாகி- இயக்கம் தந்த பொருளையே இயக்க அணியமான ஆற்றலே விசும்பு.
ஆக விசும்பு என்பது:
தான்தோன்றி இயக்கம் இல்லாத, எல்லை இல்லாத, பரந்து விரிந்த வெளியாக இருந்து- 
நிலம், நீர், தீ, காற்று மற்றும் அவற்றால் உருவான பொருள்களின் இயக்கத்தால் இயக்கம் பெற்று விண்(இறுக்கநிலை)வெளியாகி- 
இயக்கம் தந்த பொருளால் இயக்கம் பெற்று, இயக்கம் தந்த ஒவ்வொரு பொருளுக்கும் அந்தப் பொருளால் பெற்ற இயக்கத்தால் அந்தந்தப் பொருளை இயக்க அணியமாகி பொருள்களை இயக்கும் பேராற்றலே விசும்பு ஆகும்.
அடக்க முடியாமல் அழும் குழந்தையின் அழுகையை விசும்பி விசும்பி அழுகிறது என்று சொல்லுவோம். விசும்புதல் என்பது அழுகை அல்ல் அடக்கமுடியாத வெளிப்பாடுதாம் விசும்புதல்; 
விசும்பு என்பது அடக்கமுடியாத அடங்கிப் போகாத பேராற்றல். 
விசும்பு என்பதை வெறுமனே ஆகாயம் என்ற வடமொழி பெயர்ப்பைச் சுமந்து கொண்டு,
தமிழர் ஒட்டுமொத்த உலகத்தோற்றக் கோட்பாட்டையே கிடப்பில் போட்டு விட்டோம்.
விசும்பு என்ற தலைப்பிலே கூறவேண்டிய செய்திகள் ஏராளமாக இருக்கின்றன. 
தமிழர்கள்-
இந்த ஐந்து ஆற்றல்களை ஐந்திரங்கள் என்றார்கள்.
திறன் என்றால் ஆற்றல் (திற-வெளியேறு).
திரம் (திரள்) என்றால் குவிக்கப் பட்ட ஆற்றல்.
நிலம், நீர், தீ, காற்று, விசும்பு எனும் ஐந்திர (குவிக்கப் பட்ட) ஆற்றல்கள் எதனால் குவிக்கப் பட்டவை?
இடம்+காலத்தால்
திரு+தெள்ளியராதலால்
அதாவது அடிப்படை பொருள் ‘ஒன்றுகள்’ + வெளி.
தமிழர் சுட்டும் மூலமுதல் என்பது-
எல்லை இல்லாத வெளி + குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான்தோன்றி  இயக்கம் உடைய ஒன்றுகள்.
ஓன்றுகள் சிலபல எண்ணிக்கை மாற்றத்தில் நிலம், நீர், தீ, காற்று என ஐந்திர ஆற்றல்கள். + அவைகளை இயக்க அவைகள் தந்த இயக்கத்தால் இயக்கம் பெற்ற விசும்பு.
ஐந்திர ஆற்றல்கள் கூட குறைய இணைந்து கோள்கள், கோள்களில் மண் மரம் மட்டை உலோகம் நீங்கள் நான் + விசும்பு ( அனைத்தையும் படைத்த படைப்பாளியாக அல்ல) நம்மை இயக்கும் கடவுளாக.
தமிழர் வழிபாட்டு ஆற்றல்கள் இறை, கடவுள், தெய்வம் என்பன.
இறை என்பன நிலம் நீர் தீ காற்று நான்கு திரங்கள்.
கடவுள் என்பது விசும்பு திரம்.
தெய்வம் என்பவை வீட்டுத்தெய்வம், குலதெய்வம், நிலதெய்வம் என பெற்றோர்கள், முன்னோர்கள், அரசர்கள், போர்வீரர்கள், ஞாயிறு, கால்நடைகள், கருவிகள், தொழிலாளர்கள் என்றவாறு நமக்கு ஒத்துழைத்த ஆற்றல் தொய்ந்தவர்கள் (தொய்ந்தவர்கள் தெய்வங்கள்).
தமிழர் வழிபாடு நன்றி பாராட்டுதலே (பயம் பக்தி சார்ந்தது அன்று).
சிறியதிலிருந்து பெரியது, இல்லாததிலிருந்து இருப்பது, குரங்கிலிருந்து மனிதன் என்பதெல்லாம் தமிழர்க்கு உடன்பாடானதன்று.
பேரண்ட பெருவெடியிலிருந்து சிதறிய கோள்கள் தொடர்ந்து மழை குளிர்வு போன்றதெல்லாம் தமிழர் அடிப்படைகளுக்குப் பொருந்தாது.
பேரண்ட பெருவெடி சிதறலில்,
எல்லை இல்லாத வெளி + குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான்தோன்றி இயக்கம் உடைய ஒன்றுகளான விதைகள் மூலமாகவே இயல்பு மாற்றம், பல்வேறு பொருட்கள் சாத்தியம். பேரண்ட பெருவெடி தமிழர் அடிப்படையில் இறுதியாக முடியுமே அன்றி தொடக்கமாக முடியாது.
தமிழர் உலகத் தோற்றம் (தொடக்கம்) என்பது, 
எல்லை இல்லாத வெளி + குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான்தோன்றி இயக்கம் உடைய ஒன்றுகளே.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.