Show all

ஒரு குழந்தை பெற்றால் ரூ.1.35 லட்சம் ஊக்கத் தொகை! இது தென்கொரியாவில்

தென் கொரிய அரசு, அடுத்த ஆண்டு முதல், குடிமக்கள் ஒவ்வொரு குழந்தை பெற்றுக் கொள்வதற்கும் இந்தியப் பண மதிப்பில் ரூ.1.35 லட்சம் அளவுள்ள ஊக்கத் தொகை வழங்கி குழந்தைப் பிறப்பை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளது.

22,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: தென் கொரியாவில் அடுத்த ஆண்டு முதல் குடிமக்கள் ஒவ்வொரு குழந்தை பெற்றுக் கொள்வதற்கும் இந்தியப் பண மதிப்பில் ரூ.1.35 லட்சம் அளவுள்ள ஊக்கத் தொகை வழங்கப்படவுள்ளது. இது தவிர ஓராண்டுக்கு குழந்தை வளர்ப்புக்கும் நிதியுதவி தரப்படவுள்ளது.

மனிதவளமே இந்தியாவின் அன்னியச் செலாவணிக்கான சிறப்பான அமைப்பு என்ற போதும்கூட, மக்கள்தொகை அடர்த்தியும், பெருக்கமும் சிக்கல் என்று கருதுகிற அரசுகளே தொடரும் நிலையில், தென் கொரியா இப்படி ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. மகிழ்ச்சிதான். 
 
கடந்த ஆண்டில், தென் கொரியாவில் பிறந்தவர்கள் எண்ணிக்கையை விட இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாகப் பதிவாகியிருக்கிறது. இப்படி பிறந்தவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பது இதுவே அங்கு முதல் முறை.

ஏற்கனவே தென் கொரியாவில் பிறப்பு விகிதம் குறைவாக இருக்கும் நிலையில், இந்த செய்தி அவர்களுக்கு மேலும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.

கடந்த ஆண்டு அந்த நாட்டில் மொத்தம் 2,75,800 குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள்; சுமார் 3,07,764 பேர் இறந்திருக்கிறார்கள். தென் கொரிய உள்துறை அமைச்சகம், தங்கள் அடிப்படைக் கொள்கையில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான நெருக்கடியை இந்தப் புள்ளிவிவரங்கள் ஏற்படுத்தியுள்ளன.

மக்கள் தொகை பெருகும் விகிதம் குறைவாக இருக்கவேண்டும் என்று விரும்பும் நாடுகள் இருக்கலாம். ஆனால், மொத்த மக்கள் தொகையே குறையத் தொடங்கும்போது, அது ஒரு நாட்டின் மீது விவரிக்க முடியாத அழுத்தத்தைக் கொடுக்கும்.

தென் கொரியாவில் இளைஞர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இது தொழிலாளர் பற்றாக்குறையை உருவாக்கும். இது தென் கொரியாவின் பொருளாதாரத்தில் நேரடிப் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது.

பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் கடந்த மாதம் சில கொள்கைத் திட்டங்களை அறிவித்தார் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன். அதில் குடும்பங்களுக்கான பண ஊக்கத் தொகையும் ஒன்று.

இந்த திட்டத்தின் கீழ், அடுத்த ஆண்டில் இருந்து பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் இரண்டு மில்லியன் வொன் வழங்கப்படும். இது போக குழந்தை பிறந்து ஒரு அகவை நிறைவு பெறும் வரை மாதாமாதம் 3 லட்சம் வொன் வழங்கப்படும்.

தென் கொரியாவில் அதிகரித்து வரும் வீட்டுமனை விலையும், பிறப்பு விகிதம் குறைவதற்கு ஒரு முதன்மைக் காரணமாகக் கருதப்படுகிறது. நிலம் மற்றும் வீடுகளின் விலை அதிவேகமாக அதிகரிப்பது, உரிய இளம் அகவையில் திருமணம் செய்துகொள்வது மற்றும் குழந்தை பெற்றுக் கொள்வது போன்ற நடவடிக்கைகளை ஊக்குவிப்பதாக இல்லை.

 தென் கொரியாவில் குழந்தையை வளர்ப்பது என்பது மிகவும் செலவு பிடிக்கும் வேலை. அரசு கொடுக்கும் சில நூறாயிரம் வொன், தங்கள் சிக்கலைத் தீர்க்காது என்கின்றனர் பொதுவாக மக்கள். நமது இந்தியச் செலாவணி, ரூபாய் ஒன்றுக்கு 14.87 வொன்கள் ஆகும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.