Show all

குறளும் குமரிநாடன் உரையும் வரிசையில்! குறள் எண்: 001 அதிகாரம்: கடவுள் வாழ்த்து

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.  

குமரிநாடன் உரை:
தொன்மையென அனைவரும் அறிந்த ஞயிறு, கோள்களுக்கு முதன்மையானது போல, தமிழ்எழுத்துக்களுக்கு முதலாவது என்று கொண்டாடத்தக்கது அகரம். 

தமிழ் எழுத்துக்களுக்கெல்;லாம் முதலாவதானது அகரம் என்று தம்மிடம், தமிழ் கற்கவந்த மாணவர்களுக்கு, தமிழின் முதல் எழுத்து 'அ' வைக் கற்றுக்கொடுக்கிறார் திருவள்ளுவர்.

எவ்வாறெனில் உலகங்களுக்கெல்லாம் (கோள்களுக்கு எல்லாம்) தொடக்கமாக இருக்கிறது பகவன் என்கிற ஞாயிறு என்பது போல. 

இந்தக் குறளில் எழுத்துக்களில் அகரத்தின் முதன்மையை விளக்குவதற்கு வானியலை மேற்கோள் காட்டியதால், முதலெனப்படுவது இடமும் காலமும் என்று நிறுவிய தமிழ்முன்னோர், 'வானியலை' வாழ்ந்த பாடுகளின் மிகப்பெரிய அறிவாகக் கெண்டிருந்தனர் என்பதை உணர்த்துவதாகும். 

அதாவது படிப்பறிவுக்கு வருவதற்கு முன்பே தமிழ்ப்பிள்ளைகளும் தமிழ்மக்களும் கோள்களை அறிவர். ஆனால் படிப்புக்கு வருவதற்கு முன்பு எந்தப் பிள்ளையும் எழுத்தையும் எழுத்தின் வரிசையையும் அறிய மாட்டாது அல்லவா? 

அதனால்தான் திருவள்ளுவர், கோள்களில் முதன்மையானது என்று, மக்கள் அறிந்திருக்கிற பகவனை (ஞாயிறு) அகர முதன்மைக்கு உவமை ஆக்குகிறார்.

தமிழை வாழ்த்துவதற்கு அகரத்தை தூக்கிப் பிடிப்பதே திருவள்ளுவருக்கு சிறப்பெனத் தோன்றியிருக்கிறது. அதனாலேயே கோள்களுக்கெல்லாம் முதன்மையானது பகவன் போல எழுத்துக்களுக்கு முதன்மையானது அகரம் என்று கொண்டாடுகிறார் திருவள்ளுவர். மேலும் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிக்கிறார் தனது திருக்குறளை திருவள்ளுவர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.