இலங்கை கடற்படை இந்திய மீனவர்களைக் கொன்று கடலில் வீசுவதும், இந்தியா அந்த இலங்கைக்கு தடுப்பூசி பரிசுத் தொகுப்பு வழங்குவதும், எந்த வகைமைக்கானது இந்த வெளியுறவுக் கொள்கை? 11,தை,தமிழ்த்தொடராண்டு-5122: புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து கடந்த திங்கட்கிழமை அன்று பிரான்சிஸ் கோவா என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மெசியா (30), மண்டபம் அகதிகள் முகாமைச் சேர்ந்த சாம்சான்டர்வின் (28), வட்டன்வலசையைச் சேர்ந்த நாகராஜ் (52), திருப்புல்லாணியைச் சேர்ந்த செந்தில்குமார் ஆகிய 4 மீனவர்களும் மீன்பிடிக்கச் சென்றனர். எல்லை தாண்டியதாக இவர்களின் விசைப்படகைச் சிறைபிடித்த இலங்கை கடற்படையினர், தங்கள் கப்பலின் அருகில் நிறுத்தி வைத்துள்ளனர். கடல் சீற்றத்தால் அந்தப் படகின் பின்பகுதி இலங்கை கடற்படைக் கப்பலின் மீது மோதியதில், கப்பல் சேதமடைந்தது. இதனால், ஆத்திரமடைந்த கடற்படையினர் மீனவர்களைத் தாக்கியதுடன், மாற்றுக் கப்பலைக் கொண்டு மீன்பிடிப் படகைத் தாக்கி மூழ்கடித்தனர். படகிலிருந்த மீனவர்களின் நிலை என்னவென்று தெரியாமல் போனதால், மாயமான மீனவர்களைத் தேடி கோட்டைப்பட்டினத்திலிருந்து 3 படகுகளில் 10-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சென்றனர். அவர்களை இந்திய எல்லையிலேயே இலங்கைக் கடற்படையினர் பல மணி நேரம் காத்திருக்க வைத்துள்ளனர். இங்கு 4 மீனவர்களும் பத்திரமாக இருப்பதாகவும், அவர்களை விரைவில் அனுப்பி வைப்பதாகவும் இலங்கைக் கடற்படையினர் கூறியதாகக் சொல்லப்படுகிறது. மீனவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் அவர்கள் கரை திரும்பினர். மீனவர்களில் இருவரது உடல்கள் இலங்கையில் கடந்த புதன்கிழமை கரை ஒதுங்கியதாக அந்நாட்டு கடற்படையினர் தெரிவித்தனர். அடுத்த நாள் மேலும் இரண்டு மீனவர்களின் உடல்கள் கரை ஒதுங்கியதாகவும் தெரிவித்தனர். இந்த தகவலால் மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதோடு, இறந்தவர்களின் புகைப்படங்களை வெளியிட்டனர். அதில், காயங்கள் இருப்பது போல காணப்பட்டதால், இலங்கைக் கடற்படையினர் தாக்குதலில் சிக்கி அவர்கள் உயிரிழந்திருக்கக் கூடும். எனவே, இலங்கை கடற்படையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்களில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே நேற்று இறந்த 4 பேரின் உடல்களையும் இலங்கை கடற்படையினர், இந்திய எல்லையில் இந்தியக் கடற்படையினரிடம் ஒப்படைத்தனர். தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மெசியா உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல சக மீனவர்கள் மற்றும் உறவினர்கள் ஆயிரக்கணக்கானோர் தங்கச்சிமடம், இராமேஸ்வரம் சாலை அருகே திரண்டிருந்தனர். உடல் நேரடியாக அடக்கம் செய்யப்படும் இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதால், ஊர்வலம் எடுத்துச் செல்ல அனுமதி கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் கலந்துரையாடினர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றுப் போராட்ட இடத்துக்கு உடல் கொண்டுவரப்பட்டு, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இதனால், இராமேஸ்வரம் சாலையில் சுமார் 2மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி செந்தில்குமாரின் சகோதரர் முருகேசன் கூறும் போது, நாங்க தேடிப் போகும்போது, அங்க உள்ள கடல்படையினர் உங்க ஆளுங்க பத்திரமா இருக்காங்க. நீங்க கரை திரும்பி போங்கன்னு சொன்னாங்க. கொஞ்ச நேரத்துல பத்திரமா ஒப்படைச்சிடுவோம்னு சொன்னாங்க. ஆனா, இப்போ பிணமா கொடுத்திருக்காங்க. இறந்தவங்க முகம் முழுசும் காயமாகத் தான் இருக்கு. இலங்கை கடற்படை கண்டிப்பா சித்ரவதை பண்ணி அடிச்சே கொன்னுருக்காங்க. ஒன்றிய, மாநில அரசு கண்டிப்பாகத் தக்க நடவடிக்கை எடுக்கணும், என்கிறார் கண்ணீர் மல்க. இந்த சோக நிலையில்தான்- கோவிட்19 தடுப்பூசிகளின் ‘பரிசு’ ஒன்றை அடுத்த கிழமை இலங்கைக்கு அனுப்பப்போவதாக இந்தியா அறிவித்துள்ளது என இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ச அறிவித்துள்ளார். இந்த தடுப்பூசி புதன்கிழமை அன்று இலங்கைக்கு வந்து சேரும் எனவும் அவர் மகிழ்ச்சியைக் கொண்டாடுகிறார். இலங்கை கடற்படை இந்திய மீனவர்களைக் கொன்று கடலில் வீசுவதும், இந்தியா அந்த இலங்கைக்கு தடுப்பூசி பரிசுத் தொகுப்பு வழங்குவதும் என்ன மாதிரியான உறவு? எந்த வகைமைக்கானது இந்த வெளியுறவுக் கொள்கை?
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.