அதிகார மாற்றத்திற்கு ஒத்துழைப்பின்மை சார்ந்த இணையப் பதிவுகளைக் கண்டித்து டிரம்பின் கணக்குகளை முடக்கின இணையத் தளங்கள். 23,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: அமெரிக்காவில் இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்த குடிஅரசுத் தலைவர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். வருகிற 07,தை,தமிழ்த்தொடராண்டு-5122 (20.01.2021) அன்று அவரது பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. அதில் முறைப்படி அமெரிக்காவின் 46வது குடிஅரசுத் தலைவராகப் பைடன் பொறுப்பேற்க உள்ளார். ஆனால், பைடனின் வெற்றியை ஏற்க மறுத்த டிரம்ப், தேர்தலில் மோசடி நடந்துள்ளது என தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இதுபற்றிய வழக்குகளின் விசாரணையும் அறங்கூற்றுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ள டிரம்ப் மறுத்து வரும் சூழலில், மாகாண தேர்தல் அதிகாரிகளிடம் தனக்கு அதிக வாக்குகள் கிடைக்க ஏற்பாடு செய்யும்படியும் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கும் படியும் பேசுவது போன்ற டிரம்பின் கேளொலிவெளியாகி அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தத் தேர்தல் முடிவை ஏற்க மறுத்துவரும் டிரம்பின் ஆதரவாளர்கள் இன்று தேர்தல் குழு வாக்கு எண்ணிக்கைக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் போராட்டம் தீவிரமடைந்து நாடாளுமன்ற கட்டடத்திற்குள் நுழைந்த டிரம்பின் ஆதரவாளர்கள், அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தி வன்முறையில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தில் 4 பேர் உயிரிழந்ததாகவும் தெரியவருகிறது. இந்த நிலையில் ஆர்ப்பாட்டகாரர்களுக்கு ஆதரவாக டிரம்ப் கீச்சுக்களை வெளியிட்டார். இதை தொடர்ந்து, கீச்சு நிறுவனம் அவருடைய கணக்கை தற்காலிகமாக 12 மணி நேரங்களுக்கு முடக்கியது. ஒருமைப்பாட்டுக்கு எதிராக உள்ள 3 கீச்சுக்களையும் உடனடியாக நீக்கவில்லை என்றால் கணக்கு நிரந்தரமாக முடக்கப்படும் என டிரம்பை எச்சரித்தது. வன்முறை அதிகரிக்க காரணமாகும் எனக் கூறி முகநூல் நிறுவனமும் டிரம்பின் தகவல்களை நீக்கியது, அவருடைய கணக்கை 24 மணி நேரம் முடக்கியது. படவரி நிறுவனமும் அவருடைய கணக்கை முடக்கியது. மக்களாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கலவரத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் தங்களுடைய கண்டங்களை பதிவு செய்து வருகின்றனர். கலவரத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரிட்டன் தலைமைஅமைச்சர் போரிஸ் ஜான்சன், வாசிங்டனில் நடைபெற்றுவரும் இழிவான நிகழ்வுகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும், அதிகார மாற்றம் அமைதியாக நடைபெற வேண்டும் என்றும் கூறினார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.