Show all

கொரோனா தடுப்பு மருந்து உருவாக்கத்தின் மூன்றாம் கட்டத்தில் சீனா! 40000 பேர்கள் வரை பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்

கொரோனா தடுப்பு மருந்து உருவாக்குதலில்; மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு வந்திருக்கிறது சீனா. இந்த மூன்றாம் கட்ட பரிசோதனை முடிந்தால் அடுத்து மக்கள் பயன்பாடுதாம்.

29,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: உலகம் முழுக்க ஐந்து லட்சம் மக்களை கொன்று குவித்த கொரோனா என்கிற கொடிய நுண்நச்சு தற்போது மனித இனத்துக்கு மிகப்பெரும் அறைகூவலாக உள்ளது. இதனை எதிர்கொள்ள சீன அரசு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அந்நாட்டு இயல்அறிவர்கள் (சயின்டிஸ்ட்) தெரிவித்துள்ளனர்.

கொரோனா நுண்நச்சுக்கு தடுப்பு மருந்து உருவாக்க உலகின் பல மருத்துவ நிறுவனங்கள் முயன்று வருகின்றன. இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தடுப்பு மருந்து பரிசோதனையில் ஈடுபட்டு உள்ளது. இதேபோல அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிலும் தடுப்பு மருந்து சோதனை முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

தடுப்பு மருந்து குறித்து முன்னதாக அமெரிக்க நோய்தொற்று நிபுணர் ஆண்டனி பவுசி கூறுகையில், இன்னும் ஆறோழு  மாதங்களுக்குள் அமெரிக்கா கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடித்து விடும் எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது சீனாவின் கேன்சினோ நிறுவனம் ரஷ்யா, பிரேசில், சிலி, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட சோதனையை நிகழ்த்த திட்டமிட்டுள்ளது.

இந்த நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்புமருந்து ஏற்கனவே முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகளைக் கடந்துவிட்டது. தற்போது இவற்றை மனிதர்களுக்கு செலுத்திப்பார்க்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்தச் சோதனையை அதிக எண்ணிக்கையிலான தன்னார்வலர்கள் உடலில் செலுத்தி இந்த நிறுவனம் சோதனை செய்ய முயன்று வருகிறது.

இதற்காக சீனாவில் பல தன்னார்வலர்கள் தயாராக உள்ளனர். ரஷ்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் இருந்தும் இந்த தடுப்பு மருந்துக்கு தன்னார்வலர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர். சீனாவின் சுஷோ மாகாணத்தில் நடந்த தொற்றுநோய் தடுப்பு கூட்டத்தில் இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் துணைத்தலைவர் குய் டாங்ஸ{ இதுகுறித்து பேட்டி அளித்துள்ளார்.

மூன்றாம் கட்ட சோதனையில் 40 ஆயிரம் பேர்கள் உடலில் இந்த தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இவர்களது உடலில் இந்தத் தடுப்பு மருந்து எந்த விதமான மாற்றத்தை ஏற்படுத்துகிறது என சோதனைமூலம் தெரியவரும். ஏற்கனவே நோய்த் தாக்கப்பட்டவர்கள், நோய் தாக்கம் இல்லாதவர்கள், இளைஞர்கள், முதியவர்கள், பதின்பருவத்தினர் ஆகியோரை இந்தச் சோதனைக்குப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் தடுப்பு மருந்துக்கு ஆட்-5 என்சிஓவி என்பதாகப் பெயரிடப்பட்டள்ளது. தற்போது இந்த நிறுவனம் இரண்டாம் கட்ட தடுப்பு மருந்து சோதனையில் 508 பேர் மீது இந்தத் தடுப்பு மருந்து செலுத்தி பரிசோதித்தது. இதில் அந்த நிறுவனம் எதிர்பார்த்த வெற்றி கிடைத்துள்ளதாக அதன் இயக்குனர் குய் தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கான ஆதாரங்கள் வெளியிடப்படவில்லை.

இது குறித்து சீன நோய்த்தடுப்பு அமைப்பின் முன்னாள் தலைவர் செங்க் குவாங் கூறுகையில், தடுப்புமருந்து சோதனைக்கு சீன அரசு முழு ஒத்துழைப்பு அளித்துவருகிறது எனத் தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.