Show all

கொரோனாவிற்கு இரண்டாவது தடுப்பூசியும் கண்டுபிடித்து விட்டது அமெரிக்கா! ஆனால் பயன்பாட்டுக்கு 18மாதங்கள் காத்திருக்க வேண்டுமாம்!

18 மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்று முன்பே ஒரு தடுப்பூசியை அமெரிக்க கடந்த மாதம் சோதனைக்கு கொண்டு வந்த நிலையில், தற்போது கொரோனா நிரந்தரத் தீர்வுக்கு தடுப்பூசி என்று இன்னொரு ஊசியைக் கொண்டு வந்திருக்கிறது அமெரிக்கா. ஆனால் இந்த ஊசிக்கும் 18மாதங்கள் காத்திருக்கத்தான் வேண்டுமாம்.

24,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் பிட்ஸ்பர்க் நகரில் அமைந்துள்ள பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரியின் விஞ்ஞானிகள் உலக மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தருகிற ஓர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். 

கொரோனா நுண்ணுயிரியைப் போன்றதொரு நுண்ணுயிரியைப் பற்றி ஆய்வு நடத்திய நிலையில், இந்தக் கொரோனா நுண்ணுயிரிக்குத் தடுப்பூசி கண்டுபிடித்து விட்டோம் என்பதுதான் அவர்களின் அந்த மகிழ்ச்சிகான அறிவிப்பு.

கொரோனா தொற்றுப் பரவலை தடுத்து நிறுத்துகிற வகையில், ஒரு புதிய தடுப்பூசியை உறுதியாக வெளியிட முடியும் என்று சொல்லி இருக்கிறார்கள். இந்த தடுப்பூசி விரல் நுனி அளவிலானது. அதில் சர்க்கரை மற்றும் புரதத்தால் ஆன நுண்ணிய ஊசி இருக்கும்.

இதுதான் கோடானுகோடி மக்களை கொரோனா தொற்று பரவுவதில் இருந்து காக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசியை தற்போது எலிகளுக்கு செலுத்தி விஞ்ஞானிகள் பரிசோதித்து இருக்கிறார்கள். இது கொரோனா நுண்ணுயிரியை வீழ்த்துவதற்கான ‘நோய் எதிர்ப்பு பொருள்’ வழங்கி உள்ளது. ஆனாலும் எலிகள் நீண்ட கால சோதனைகளுக்கு இன்னும் உட்படுத்தப்படவில்லை. அது மட்டுமல்ல, இந்த தடுப்பூசியின் பக்க விளைவுகள் என்னென்ன என்பதுவும் இனிதான் கண்டறியப்பட வேண்டும்.

இந்தத் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ள விஞ்ஞானிகள், இதற்கு முன்பாக சார்ஸ், மெர்ஸ் போன்ற கொரோனா குடும்ப நுண்ணுயிரிகள் பற்றி ஆராய்ச்சி நடத்தி வந்ததுதான், இப்போது கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கு வழிநடத்தி இருக்கிறது என்கிறார்கள்.

அவர்களில் ஒருவரான பேராசிரியர் ஆண்ட்ரியா கம்பாட்டோ கூறும்போது, சார்ஸ் கொவ்-2 உடன் நெருங்கிய தொடர்புடைய இந்த இரு நுண்ணுயிரிகளும், கொரோனா நுண்ணுயிரியை வீழ்த்துவதற்கு அந்த நுண்ணுயிரிக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுவதற்கு ஸ்பைக் புரதம் என்றழைக்கப்படுகிற புரதச்சத்து முதன்மை என எங்களுக்கு உணர்த்தி உள்ளது என்கிறார்.

ஆனால் தடுப்பூசியை பொறுத்தமட்டில் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று, இது இனி கொரோனா தொற்று தாக்காமல் தடுக்க உதவும். அதே நேரத்தில் தற்போது பரவியதற்கு எதிரான சிகிச்சையாக அமையாது என்று தெரிவித்துள்ளனர்.

பிட்கோவேக் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, சிகிச்சையியல் ஒத்திகை என்று அழைக்கப்படுகிற மருத்துவ பரிசோதனைகளை எல்லாம் முடித்துக்கொண்டு சந்தைக்கு வர இன்னும் 18 மாதங்கள் ஆகலாம் என்கிறார்கள்.

அதற்கு முன்னால் தற்போது சியாட்டில் நகரில் மார்ச் மாதம் பரிசோதிக்கத் தொடங்கியுள்ள தடுப்பூசி வந்து விடலாம் எனவும் சொல்லப்படுகிறது. ஆனாலும் எதுவும் உடனடியாக வந்து விடாது என்பதுதான் மகிழ்ச்சியைத் தடுக்கும் சோகம்.

1.இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி சோதித்துப் பார்க்கலாம் என்ற நிலையை எட்ட வேண்டும். அதற்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் ஒப்புதலைப்பெற வேண்டும்.

2.அடுத்த சில மாதங்களில் இந்த சிகிச்சையியல் ஒத்திகை சோதனையை தொடங்கி விட முடியும்.
3.இது தொடக்க கட்டத்தில் அளவிடக்கூடிய அளவில்தான் (குறைந்த அளவில்) இருக்கும்.
4.தடுப்பூசியைப் பொறுத்தமட்டில் தொடக்க காலக்கட்டத்தில் அளவிடும் தன்மை பற்றி நாம் கவனிக்க தேவையில்லை என்பது பேராசிரியர் ஆண்ட்ரியா கம்பாட்டோ கருத்தாக உள்ளது.
5.எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லை என்கிற பட்சத்தில் குறைந்தது ஒரு ஆண்டு காலம் சோதித்துப் பார்க்க வேண்டும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். எப்படிப்பார்த்தாலும் கண்களுக்கு எட்டுகிற தூரத்தில் தடுப்பூசி இல்லை.

அமெரிக்க தேர்தலுக்கு முன்னதாக (நவம்பர்-3) தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட வேண்டும் என்று அந்த நாட்டின் அதிபர் டிரம்ப் ஆர்வப்படுகிறார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.