25,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையில், கொழும்பு மாநகர அவை உறுப்பினரும், நவோதய மக்கள் முன்னணியின் தலைவருமான எஸ்.கே. கிருஷ்ணா அகவை40 சுட்டுக் கொல்லப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது. தலைநகர் கொழும்பில், செட்டியார் தெருவில் உள்ள தமது வியாபார நிலையத்தில் இருந்த போது, காலை 7.45 அளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இவர், கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்தது. இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை புறக்கோட்டை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளாக நவோதயா பொதுநல அமைப்பை கொழும்பு தலைநகரில் இவர் நடத்தி வந்தார். தேர்தலில் போட்டியிருவதற்காக இந்த அமைப்பு நவோதயா மக்கள் முன்னணி என அண்மையில் மாற்றப்பட்டது. எஸ்.கே. கிருஷ்ணாவின் சமூக சேவையை பாராட்டி அவருக்கு தேசமான்ய, தேசபந்து உள்ளிட்ட பட்டங்களும் வழங்கப்பட்டன. நவோதயா அமைப்பின் மூலமாக கொழும்பு தலைநகரில் உள்ள சுமார் 20,000 குடும்பங்கள் நேரடியான உதவிகளை பெற்றுவந்ததாக சொல்லப் படுகிறது. கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கு பல உதவிகளை செய்துவந்த இவரது அரசியல் வளர்ச்சி ஏனைய கட்சிகளுக்கு பாரிய சவாலாக இருந்துவந்ததாக தெரிகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,843.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



