நாடு கடந்து பணிநிமித்தம் வந்திருக்கும் இந்தியர்கள், முஸ்லிம்கள் குறித்து அவதூறு கருத்துக்களை சமூகவலைதளங்களில் பதிவிட வேண்டாம் எச்சரித்திருந்த நிலையிலும், முஸ்லிம்கள் குறித்து அவதூறு கருத்துக்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்த மூவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 20,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: இரண்டு கிழமைகளுக்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்தியத் தூதர் பவன் கபூர், அங்குள்ள இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுத்து கீச்சு பதிவிட்டிருந்தார். அதில், “இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் எந்த அடிப்படையிலும் ஒன்றுக்கொன்று வேறுபாடு பார்ப்பதில்லை. இவ்வாறான நிலையில், எந்த அடிப்படையிலாவது இரண்டு நாட்டுக்கும் இடையிலும் பாகுபாடு இருப்பதாகக் கற்பிப்பதும், எழுதுவதும் சட்டப்படி இரண்டு நாட்டிலும் குற்றமுடைய செயலே. ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்கள் இதை மனதில் வைத்து செயல்பட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார் இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலைபார்க்கும் இந்தியர்கள் இஸ்லாம் குறித்து அவதூறாக சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவிட்டதைத் தொடர்ந்து அவர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம் மதம், அந்த சமூத்தினர் குறித்து அவதூறாக எழுதுவது தண்டனைக்குரிய குற்றம் என இந்திய தூதரம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டும் இந்தியர்கள் தொடர்ந்து இதுபோல் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்து நடவடிக்கைக்கு உள்ளாகின்றனர். துபாயில் ஒரு உணவகத்தில் சமையல்காரராக இருக்கும் ராவத் ரோஹித், ஒரு நிறுவனத்தில் காசாளராக பணிபுரியும் இந்தியர் ஒருவரும் இஸ்லாம் குறித்து அவதூறாக எழுதியதால் வேலையிலிருந்து நீக்கப்பட்டதாக கல்ப் நியூஸ் செய்திகள் தெரிவிக்கின்றன. துபாயில் இத்தாலியன் உணவகம் நடத்திவரும் அஜாதியா குழுமத்தின் செய்தித்தொடர்பாளர், சமையல்காரரும் இந்தியருமான ரோஹித்தை வேலையிலிருந்து நீக்கியதை உறுதி செய்துள்ளார் இந்த எச்சரிக்கைக்குப் பின் முஸ்லிம்கள் குறித்து சர்சைக்குரிய வகையில் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்த 3-க்கும் மேற்பட்ட இந்தியர்களை அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனங்கள் வேலையிலிருந்து நீக்கின. கடந்த கிழமை விசால் தாக்கூர் என்ற பொய்யான பெயரில் சமூக ஊடகத்தில் இஸ்லாம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் எழுதிய இந்தியரை துபாயைச் சேர்ந்த டிரான்ஸ்கார்ட் குழுமம் வேலையிலிருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



