லடாக்கையும், அருணாசலபிரதேசத்தையும், இந்தியா சட்டவிரோதமாக உருவாக்கி உள்ளதாக சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறியுள்ளார். 28,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியப் படைக்கும் சீன படைக்கும் இடையே கடந்த 5 மாதங்களாக கிழக்கு லடாக்கில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இரு தரப்பும் படைகளை குவித்துள்ளன. இந்தச் சிக்கலுக்கு தீர்வு காண கிழக்கு லடாக்கில், அசல் கட்டுப்பாட்டுகோடு பகுதியில், இந்திய எல்லைக்குட்பட்ட சுசுல் என்ற இடத்தில் முந்தாநாள் மதியம் இரு தரப்பு இராணுவத்துக்கும் இடையேயான 7-வது சுற்று கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடல் 12 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்றது. கிழக்கு லடாக்கில் பல்வேறு மோதல் பகுதிகளில் இருந்தும் இரு தரப்பு படைகளை விலக்கிக்கொள்வதற்கான வழிவகைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இதற்கிடையே லடாக், அருணாசலபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், எல்லையில் 44 பாலங்களை இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் முந்;தாநாள் திறந்துவைத்தார். ஆனால் இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதையொட்டி சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் நேற்று கூறியதாவது:- லடாக்கையும், அருணாசலபிரதேசத்தையும், இந்தியா சட்டவிரோதமாக உருவாக்கி உள்ளது. இதை நாங்கள் அங்கீகரிக்கவில்லை. எல்லையில் பதற்றத்துக்கு இந்தியாதான் மூல காரணம். இந்தியா தொடர்ந்து சர்ச்சைக்குரிய பகுதிகளில் உள்கட்டமைப்பு கட்டுமானங்களை செய்வதும், இராணுவத்தை குவிப்பதையும் செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்தியாவில் ஒன்றிய பாஜக அரசு முன்னெடுத்த- காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு தகுதி நீக்கத்தை- பாகிஸ்தான் நேரடியாக தொடர்ந்து கண்டித்து வருகிறது. ஆனால் அந்த முன்னெடுப்பின் மீதாக இந்திய பாஜக அரசு முன்னெடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளான சாலை சிரமைப்புகள், பாலக்கட்டமானங்களை சீனா தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இந்த நிலையில் முந்தாநாள் இரு இராணுவங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் முடிவில், ‘லடாக்கையும், அருணாசலபிரதேசத்தையும், இந்தியா சட்டவிரோதமாக உருவாக்கி உள்ளது. இதை நாங்கள் அங்கீகரிக்கவில்லை’ என்று சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் மூலமாகத் தெரிவித்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



