நாங்கள் கேட்பு (ஆர்டர்) தெரிவித்திருந்த மருந்துகளை அனுப்பவில்லை என்றால் இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். 25,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சீனாவின் ஹ_பேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 202 நாடுகளுக்கு பரவி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டு ஐரோப்பாவை திணறடித்த கொரோனா தற்போது அமெரிக்காவில் கடுமையாக பாதித்;து வருகிறது. உலக அளவில் கொரோனா தொற்று அதிகம் பரவிய நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 30 ஆயிரத்து 233 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் தொற்று பரவியவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 66 ஆயிரத்து 906 ஆக அதிகரித்துள்ளது. அந்நாட்டில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 868 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே, அமெரிக்கா கேட்பு தெரிவித்திருந்த கொரோனா சிகிச்சைக்கு உபயோகப்படுத்தப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகள் உள்பட மருத்துவ பொருட்களை இந்தியா எங்களுக்கு வழங்க வேண்டும் என அதிபர் டொனால்டு டிரம்ப் முந்தாநாள் தலைமைஅமைச்சர் மோடியிடம் தொலைபேசியில் உரையாடும்போது வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால், உள்நாட்டில் தேவை அதிகரித்து வருவதால் அவ்வகை மருந்துகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு இந்திய அரசு அண்மையில் தடைவிதித்தது. இதனால் டிரம்ப் கேட்ட ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகள் அமெரிக்காவுக்கு கிடைப்பதில் சிக்கல் நிலவி வருகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நான் இந்தியத் தலைமை அமைச்சர் மோடியிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பேசினேன். கேட்பு தெரிவித்த மருந்துகளை நாங்கள் பெற அனுமதி அளித்தால் நன்றாக இருக்கும் எனவும் கூறினேன். ஒரு வேளை அவர் மருந்துகளை அமெரிக்காவுக்கு அனுப்ப அனுமதி அளிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால், ஒருவேளை அவ்வாறு நிகழ்ந்தால் அதற்கான தக்க பதிலடி கொடுக்கப்படலாம். என்றார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.